மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்தும் அதிகரித்து வரும் டெங்கு நோயாளர்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோய் பரவல் வேகமாக அதிகரித்து வருகின்றது. கடந்த டிசம்பர் 18 ஆந் திகதி தொடக்கம் டிசம்பர் 25 ஆந் திகதி வரையும் 236 பேர் டெங்குநோய் தாக்கத்திற்குள்ளாகியுள்ளனர்.

இந்த வாரம் டெங்கு தாக்கத்தினால் பாதிப்புக்குள்ளான ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 82 நோயாளர்களும், வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 69 நோயாளர்களும், காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 39 நோயாளர்களும், மண்முனைப் பற்று ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 10 நோயாளர்களும், மண்முனை வடக்கு மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 9 பேரும், வாகரை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேரும், கிரான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 24 பேரும் பட்டிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவருமாக மொத்தம் 236 பேர் டெங்கு நோய் பாதிப்புக்குள்ளானவர்களாக இனங் காணப்பட்டுள்ளனர்.

இருப்பினும் ஏறாவூர், செங்கலடி, வவுனதீவு, வெல்லாவெளி, களுவாஞ்சிகுடி ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் டெங்கு நோயாளர்கள் எவரும் இனங்காணப்படவில்லை.
மேலும் கடந்த 12 மாதங்களில் இம்மாவட்டத்தில் 3 ஆயிரத்தி 434 பேர் டெங்கு நோய்த் தாக்கத்திற்குட்பட்டுள்ளதாகவும் 4 பேர் மரணமடைந்துள்ளதாகவும் பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை இம் மழைகாலத்தில் பொதுமக்கள் மிகவும் விழிப்புடன் செயல்பட்டு வீடுகளில் தேங்கி கிடக்கின்ற குப்பைகள் நீர் தங்கியுள்ள இடங்கள் போன்றவற்றை அகற்றி டெங்கு நுளம்புகள் பரவுவதற்கு இடம் கொடுக்காத வகையில் சூழலை துப்பரவாக வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.