மரக்கறி தோட்டத்தில் பொருத்தப்பட்ட மின்சார வேலியில் சிக்கி 5 பிள்ளைகளின் தந்தை பரிதாப மரணம்

(க.கிஷாந்தன்)

பொகவந்தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சென்ஜோன் டிலரி கிவ் மேற்பிரிவு தோட்டத்தில் மரக்கறி தோட்டத்தில் பொருத்தப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி 5 பிள்ளைகளின் தந்தையொருவர் மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் அந்தோனி சாமி வயது 62 என அடையாளம் காணப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று   (08) இடம்பெற்றுள்ளது. இளைஞர் ஒருவர் கூரையின் மீது ஏறி துணி காய வைக்கும் போது குறித்த நபர் மரக்கறி தோட்டத்தில் வீழ்ந்து கிடப்பதனை கண்டுள்ளார்.

அதனை தொடர்ந்து பிரதேசவாசிகளிடம் தெரிவித்த போது குறித்த நபர் மின்சாரம் தாக்கி இறந்து கிடப்பதனை 3 மணியளவில் கண்டுள்ளனர்.

பின் பிரதேசவாசிகள் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.  இச்சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது,

குறித்த நபர் தனது மரக்கறி தோட்டத்தை மிருகங்களிடமிருந்து பாதுகாப்பதற்காக மின்சார வேலியை சட்டவிரோதமாக பொருத்தியுள்ளார்.

குறித்த நபர் ஒவ்வொரு நாளும் தோட்டத்திற்கு செல்லும் போது மின்சாரத்தை துண்டித்துவிட்டு செல்வதாகவும் இன்றைய தினம் அதனை துண்டிக்காது மறந்து சென்றதனால் குறித்த சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என பிரதேச வாசிகள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவரின் சடலம் நீதவானின் மேற்பார்வையின் பின் பிரேத பரிசோதனைக்காக  டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.