சனிக்கிழமையிலும் பாடசாலைக்கு மாணவர்களை அனுப்புவதில் பெற்றோர் ஆர்வம்

சனிக்கிழமையிலும் பாடசாலைக்கு மாணவர்களை அனுப்ப முடியுமா? என்று பெற்றோர் கோரிக்கையை முன்வைத்திருப்பதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளை சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை பிற்பற்றி மீள ஆரம்பிப்பது தொடர்பாக கடந்த 6 ஆம் திகதி தொடக்கம் ஞாயிற்றுக்கிழமை வரையில் பெற்றோருக்கு தெளிவுப்படுத்தப்பட்டது. இதன்போதே இந்த விடயங்கள் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்.

புத்தாண்டில் முதலாம் தவணைக்காக பாடசாலைகள் நேற்றைய தினம் (11) ஆரம்பிக்கப்பட்டது. இதுதொடர்பாக நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று சூழ்நிலைக்கு மத்தியிலும் மாணவர்களின் கல்வி உரிமையை பெற்றுக்கொடுக்கும் வகையில் மிகுந்த சவாலுக்கு மத்தியில் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பான தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மேல் மாகாணம் மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட பின்பே பாடசாலைகளை திறப்பதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும், அது தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர்ந்த அனைத்து பாடசாலைகளும் நேற்று (11) முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதேவேளை, எதிர்வரும் ஜனவரி 25 ஆம் திகதி முதல் தனிமைப்படுத்தலுக்காக முடக்கப்பட்டுள்ள பிரதேசங்கள் தவிர்ந்த மேல் மாகாணத்தில் உள்ள ஏனைய அனைத்து பாடசாலைகளும் 11 ஆம் வகுப்பு கல்வி நடவடிக்கைகளுக்காக ஆரம்பிக்கப்படவுள்ளன என்று அமைச்சர் தெரிவித்தார்.

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கான தீர்மானம் தன்னிச்சையாக மேற்கொள்ளப்பட்டது அல்ல, மிகுந்த அவதானத்துடன் நாம் தயாரித்த திட்டத்திற்கு அமையவே பாடசாலைகள் திறக்கப்பட்டன. அதுமட்டுமன்றி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் முறையாக முன்னெடுக்கப்படுகின்றனவா? என ஆராய்வதற்கும் விசேட நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன என்றும் அமைச்சர் கூறினார்.

இதன்படி அனைத்து பாடசாலைகளிலும் அதிபரின் தலைமையில் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.  இந்த குழுவில் பொது சுகாதார பரிசோதகர்கள், கிராம உத்தியோகத்தர்கள், பொலிஸ் பரிசோதகர்கள், பழைய மாணவர் சங்க பிரதிநிதிகள், பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் ஆகியோருக்கு இந்த குழுவில் பொறுப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதனை மேற்பார்வை செய்ய அனைத்து வலயக் கல்விப் பணிப்பாளர்கள், மாகாணக் கல்விப் பணிப்பாளர்களுக்கும் இந்த வேலைத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளனர் என்று கல்வியமைச்சு கடந்த சில தினங்களுக்கு முன் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கும் அறிவித்திருந்தது என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.