மனைவியை அழைத்து வாருங்கள் – கணவன் தொலைபேசி கோபுரத்தில் ஏறி நின்று போராட்டம்

வெளிநாட்டில் பணியாற்றும் தனது மனைவியை நாட்டுக்கு அழைத்துவர உதவி செய்யுமாறு கோரிக்கை விடுத்து கம்பஹா உடுகம்பொல பிரதேசத்தில் 216 அடி உயரமான தொலைபேசி கோபுரத்தில் ஏறி நின்று 24 வயதுடைய கணவர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இவரது இந்த போராட்டம் நேற்று சனிக்கிழமை முற்பகல் 11 மணியளவில் ஆரம்பமானது. நீர்கொழும்பு பிடிப்பனை பிரதேசத்தைச் சேர்ந்த நபரே இவ்வாறு போராட்டத்தில் குதித்தவராவார்.

பல வருடங்களுக்கு முன்னர் தனது மனைவி ஜோர்தானுக்கு தொழிலுக்காகச் சென்றதாகவும். கடந்த ஒன்பது மாத காலமாக அவர் அங்கு முகாம் ஒன்றில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவிக்கிறார். இது தொடர்பாக சகல விபரங்களும் அடங்கிய ஆவணங்களை வெளிநாட்டு அமைச்சுக்கு வழங்கியதாகவும் அமைச்சு இது தொடர்பாக நடவடிக்கை எடுத்தபோதும் அமைச்சில் பணியாற்றும் அதிகாரி ஒருவர் தனது மனைவியை நாட்டுக்கு அழைத்த வருவதற்காக தம்மிடம் நான்கு இலட்சம் ரூபா கேடட்தாகவும் அந்த நபர் ஊடகங்களிடம் தெரிவித்தார். தன்னிடம் அந்த தொகை இல்லாததன் காரணமாக சுற்றுலாத்துறை அமைச்சரை சந்தித்தபோது வெளிநாட்டு அமைச்சின் அதிகாரி நான்கு இலட்சம் ரூபா பணம் கேட்டமை தொடர்பாக ஒலிப்பதிவு இருக்குமாயின் அதனை தன்னிடம் வழங்குமாறு அமைச்சர் கூறியதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மீன் விற்பனை சந்தையில் மீன் பெட்டிகளை ஏற்றி இறக்கும் தொழில் செய்வதாகவும் அதற்காக ஒரு பெட்டிக்கு 2 ரூபா கிடைப்பதாகவும் ஜோர்தானில் உள்ள தூதுவர் தம்மிடம் மனைவியை அங்கிருந்து அனுப்புவதற்காக பணம் கேட்பாதகவும் மேலும் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு கம்பஹா பொலிஸார் வருகை தந்தனர். பின்னர் இன்று அவருடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தையைத் தொடரந்து முற்பகல் 10.30 மணியளவில் சுற்றுலாத்துறை அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அவர் தொலைபேசி கோபுரத்தில் இருந்து கீழே இறங்கினார்.

ஜோர்தானில் முகாம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ள அந்த நபரின் மனைவியை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான எற்பாடுகள் செய்யப்படும் என்ற வாக்குறுதியை அதிகாரிகள் வழங்கியதன் பின்னர் அந்த நபர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டார். அந்த நபரின் மனைவி விசா இன்றி ஜோர்தானில் தங்கியிருந்ததன் காரணமாக அங்கு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சில மாத காலம் சிறை வைக்கப்பட்டதன் பின்னர் தற்போது அங்கு முகாம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.