தமிழ் தேசிய கூட்டமைப்பின் வசமானது செங்கலடி பிரதேச சபை !

மட்டக்களப்பு – ஏறாவூர்பற்று செங்கலடி பிரதேச சபையின் தவிசாளராக சின்னத்துரை சர்வானந்தன் ஆறு மேலதிக வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்டார்.

மட்டக்களப்பு – ஏறாவூர்பற்று செங்கலடி பிரதேச சபையின் புதிய தவிசாளரைத் தெரிவு செய்வதற்கான அமர்வு,  இன்று (18) கிழக்கு மாகாண உள்ளுளூராட்சி ஆணையாளர் ந.மணிவண்ணன் தலைமையில் நடைபெற்றது.

31 பிரதேச சபை உறுபினர்களைக் கொண்ட குறித்த பிரதேச சபையில் ஏற்கனவே தவிசாளராக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ந.கதிரவேல் பதவி வகித்தார்.

இந்நிலையில் 2021 ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் இரண்டு தடவைகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு, தோற்கடிக்கப்பட்டமையினால் உள்ளூராட்சி சபைகள் சட்டத்தின் பிரகாரம் தவிசாளர் பதவி இழக்கப்பட்டது.

புதிய தவிசாளரை தெரிவு செய்வதற்காக திறந்தவெளி வாக்கெடுப்பிற்கு விடுவதா அல்லது இரகசிய வாக்கெடுப்பிற்கு விடுவதா என்பது குறித்து கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரினால் உறுப்பினர்களிடம் கோரப்பட்டது. இதற்கு திறந்தவெளி வாக்கெடுப்பிற்கு விடுமாறு கோரியிருந்தனர்.

இதன்போது வாக்கெடுப்பிற்கு போட்டியிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதேச சபை உறுப்பினர் சி.சர்வானந்தனை, வ.சந்திரவர்மன் (த.தே.கூ) முன்மொழிய அதை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பி.சபை உறுப்பினர் சி.சிவானந்தன் (த.தே.கூ) வழி மொழிந்தார்.

இதேவேளை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ந.திருநாவுக்கரசுவை, நா.மோகன்ராஜ் (த.ம.வி.பு) முன்மொழிய அதை உறுப்பினர் க.லோகிதராஜா (த.ம.வி.பு) வழி மொழிந்தார்.

வாக்கெடுப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் போட்டியாளர் சி.சர்வானந்தனுக்கு ஆதராவாக த.தே.கூ- 07 , ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி -06 ,  ஐ.தே.க -03,  தமிழர் விடுதலைக் கூட்டணி -01 ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 17 உறுப்பினர்களும்  தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் போட்டியாளர் ந.திருநாவுக்கரசுக்கு ஆதரவாக த.ம.வி.பு – 08, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி – 01,  ஐ.தே.க – 01,  ஐக்கிய சமாதான கூட்டமைப்பு – 01 ஆகிய கட்சிகள் சார்பாக 11 உறுப்பினர்களின் வாக்குகளும் கிடைக்கப்பெற்றது. மற்றும் தமிழர்விடுதலைக் கூட்டணியின் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் மற்றும் ஜனநாஜக தேசிய இயக்கம் கட்சியின் உறுப்பினர் ஒருவர் ஆகிய இருவரும் இதற்கு நடுநிலை வகித்தனர்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினரொருவர் சபைக்கு சமூகமளிக்கவில்லை. 06 மேலதிக வாக்குகளால் சி.சிவானந்தன்(த.தே.கூ) தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவனேசத்துரை சந்திரகாந்தன்(பிள்ளையான்), தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் கு.ஹிரிதரன் ஆகியோர் சபைக்குள் பிரசன்னமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.