நாட்டின் சகல தரப்பினருக்கும் உண்மையான சுதந்திரம் கிடைக்கப் பிரார்த்திப்போம்-இம்ரான் மஹ்ரூப் எம்.பி

நாட்டின் சகல தரப்பினருக்கும் பெயரளவில் அன்றி உண்மையான சுதந்திரம் கிடைக்கப் பிரார்த்திப்போம் என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற  உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் இன்று (04) விடுத்துள்ள சுதந்திர தின அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:
நாட்டின் சகல பிரசைகளும் எவ்வித வேறுபாடுமின்றி ஒன்றிணைந்து அந்நியரிடமிருந்து சுதந்திரத்தைப் பெற்றோம். அப்போது நமது மூதாதையர்கள் இலங்கையர் என்ற அடிப்படையில் ஒன்றிணைந்திருந்தனர். அந்த ஒற்றுமை தான் நாம் இரத்தம் சிந்தாமல் சுதந்திரம் பெற துணை செய்தது.
காலப்போக்கில் சிலரது அரசியல் சுயநலத்துக்காக நாட்டில் இனவாதம் பரப்பப்பட்டது. ஒற்றுமையாக இருந்த இந்த நாட்டுமக்கள் தங்களுக்குள் முட்டி மோதிக் கொள்ளும் நிலை உருவாக்கப்பட்டது.
இதனால் நமது நாடு அபிவிருத்தியில் பின்தள்ளப்பட்டு தொடர்ந்து பிறநாடுகளிடம் கையேந்தி நிற்கும் நிலை உருவானது.
சுதந்திரத்திற்குப் பின் 3 தலைமுறைகள் கடந்து விட்டன. அன்று முதல் இன்று வரை நமது நாடு அபிவிருத்தி அடைந்து வரும் நாடாகவே இருந்து வருகின்றது. அடுத்த சந்ததிக்கும் அபிவிருத்தி அடைந்து வரும் நாட்டையே நாம் ஒப்படைக்கப் போகின்றோம்.
1956 இல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் விதைக்கப்பட்ட இந்த இனவாதம் இன்று பொதுஜன பெரமுனவினால் புத்துருவாக்கப்பட்டு நாட்டில் தலைவிரித்தாடுவதே இந்த நிலைக்கு காரணம்.
இன்று கட்சி பேதங்களால் புறக்கணிப்பு ஆரம்பமாகி உள்ளது. நாட்டில் முஸ்லிம் மக்கள் தமது சமய முறைப்படி இறந்த உல்களை அடக்கம் செய்ய முடியாது. தமிழ் மக்களது பூர்விக சமயத்தலங்கள் அபகரிக்கப்படுகின்றன. தோட்டத் தொழிலாளர்கள் ஆயிரம் ரூபா என்ற வார்த்தையினால் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் உண்மையான சுதந்திரம் இந்த நாட்டு மக்களுக்கு உள்ளதா என்று சிந்திக்க வேண்டியுள்ளது. எனவே, பெயரளவில் போலியான சுதந்திரம் தினம் கொண்டாடாமல் உண்மையான சுதந்திர தினம் கொண்டாடும் நாள் வெகுவிரைவில் வரவேண்டும் என்று அனைவரும் பிரார்த்திப்போம் என இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.