பேரணியில் பங்கேற்றோரை சிறையில் அடைத்து வாகனங்களையும் பறிமுதல் செய்யவுள்ளோம் – மிரட்டுகின்றது கோட்டாபய அரசு!

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியில் கலந்துகொண்டவர்களுக்கு எதிராக வழக்குகளைத் தாக்கல் செய்வோம்.”

– இவ்வாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

அத்தோடு, பேரணியில் கலந்துகொண்டவர்களின் வாகனங்களைப் பறிமுதல் செய்து அவர்களைச் சிறையில் அடைப்போம் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிடம் தெரிவித்த அவர் மேலும் தெரிவித்ததாவது:-

இவ்வாறான போராட்டங்கள் – பேரணிகள் குறித்து எமக்கு முன்னரே புலனாய்வுத் தகவல்கள் கிடைத்து விடுகின்றன. அதற்கமையவே நாம் நீதிமன்றத் தடை உத்தரவுகளைப் பெற்றோம்.

நாங்கள் போராட்டக்காரர்களைக் கைதுசெய்வதையும், அவர்கள் மீது கண்ணீர்ப்புகை பிரயோகிப்பதையும் சுமந்திரன், கஜேந்திரகுமார் போன்றவர்கள் விரும்பினார்கள்.

இதன் காரணமாகவே, நாங்கள் சகிப்புத்தன்மையுடன் நடந்துகொண்டோம். ஆனால், தற்போது நீதிமன்றத் தடை உத்தரவுகள் உள்ளன. எங்களிடம் பேரணியில் கலந்துகொண்டோரின் படங்கள் மற்றும் வாகனங்களின் படங்கள் உள்ளதால் இந்தத் தனிநபர்களுக்கு எதிராக நாங்கள் சட்டத்தின் அடிப்படையில் செயற்படுவோம்.

இந்தப் பேரணி தொடர்பில் யாரும் அச்சப்படத் தேவையில்லை. அடுத்த சில நாட்களில் வழக்குகளைத் தாக்கல் செய்யவுள்ளோம்.

இதேவேளை, சுமந்திரனுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கவுள்ளோம். அதனால்தான் அவருக்கு வழங்கப்பட்ட விசேட அதிரடிப்படை பாதுகாப்பையும் விலக்கிக்கொண்டோம்” – என்றார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.