சுமந்திரனுக்கான பாதுகாப்பு நீக்கப்பட்டமை குறித்து சபையில் கருத்து மோதல்!

நீதிமன்ற உத்தரவை மீறியமை காரணமாகவே எம்.ஏ.சுமந்திரனுக்கான விசேட அதிரடிப் படையின் பாதுகாப்பு நீக்கப்பட்டது என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று (11) எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவற்று கூறினார்.

இதேவேளை அண்மையில் விசேட அதிரடிப் படையினரை வெளியில் நிறுத்திவிட்டு, வீட்டுக்குள் சென்று சுமந்திரன், பயங்கரவாதிகளுக்கு அஞ்சலி செலுத்தியதாகவும் இந்த நிகழ்வின்போதே அவருக்கு பாதுகாப்பை நீக்குவது குறித்து தீர்மானிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

இந்நிலையில் நீதிமன்ற தடை விதிக்கப்பட்ட போராட்டங்களில் பங்கேற்றத்துடன் நீதிமன்ற உத்தரவையும் மீறியிருந்த சுமந்திரனுக்கு விசேட அதிரடிப் படையின் பாதுகாப்பினை தொடர்ந்தும் வழங்க முடியாது என்றும் சரத் வீரசேகர தெரிவித்தார்.

இதேவேளை சபையில் ஒழுங்கு பிரச்சினையை எழுப்பி உரையாற்றிய சரத் பொன்சேகா, நீதிமன்ற தடையுத்தரவை மீறிய குற்றச்சாட்டில் நாடாளுமன்ற உறுப்பினருக்கு பாதுகாப்பை நீக்குவதென்பது சரியான காரணமல்ல என குறிப்பிட்டார்.

பயங்கரவாதிகளுக்கு அஞ்சலி செலுத்தியமைக்காக பாதுகாப்பை நீக்கியாதாக கூறினால், பொதுமக்கள், பொலிஸார் மற்றும் இராணுவத்தினரை கொலை செய்த குற்றச்சாட்டுக்கள் உள்ள கருணா அம்மான், பிள்ளையான் போன்றோருக்கு பாதுகாப்பு வழங்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.

தன்னை சுற்றி அதிகளவிலான இராணுவத்தினரை பாதுகாப்பிற்காக வைத்திருக்கும் பிள்ளையானை பார்க்கும்போது தான் வெட்கப்படுவதாகவும் சரத் பொன்சேகா குற்றம் சாட்டினார்.

இப்பிடியான நிலையில் சுமந்திரனுக்கான பாதுகாப்பினை நீக்கியதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.