உலகளாவிய மாற்றத்திற்கு ஏற்றவாறு நாட்டை விரைவாக மாற்றியமைக்க வேண்டும்- ஜனாதிபதி

உலகளாவிய மாற்றங்களுடன் இலங்கை ஏற்றவாறு நாட்டை விரைவாக மாற்றியமைக்க  வேண்டும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வலியுறுத்தினார்.

நாங்கள் பின்தங்கியிருக்க முடியாது. விரைவாக மாறிவரும் சமூக நிலைமைகளுக்கு மத்தியிலும் கூட மாணவர்களுக்கு ஏற்ற கல்வி வழங்கப்பட வேண்டும். இது பல்கலைக்கழகங்கள் மற்றும் ஏனைய உயர் கல்வி நிறுவனங்களால் கவனிக்கப்பட வேண்டிய மற்றும் அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய ஒரு பகுதி என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

நேற்று (16) பிற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 2020 பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 31 வது பட்டமளிப்பு விழா இன்று இடம்பெற்றது. பாதுகாப்பு ஆய்வுகள், முகாமைத்துவம், வரத்தக முகாமைத்துவம், சட்டம், மருத்துவம், பொறியியல், கைத்தொழில் விஞ்ஞானம் மற்றும் சமூகவியல் ஆகிய துறைகளை உள்ளடக்கிய வகையில் 1379 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.

ஐந்து பேருக்கு கலாநிதி பட்டங்கள், 263 பட்டப்பின்படிப்பு மற்றும் டிப்ளோமா பட்டங்கள் இதில் உள்ளடங்கும். ஆரம்ப பட்டதாரிகளின் எண்ணிக்கை 1111 ஆகும்.

சிறந்த இராணுவ அதிகாரியாக இரண்டாவது லெப்டினன்ட் ஆர்.எம்.டி.ஈ.பி ரத்நாயக்கவும் சிறந்த கடற்படை அதிகாரியாக லெப்டினன்ட் வி.எஸ். பலிஹவதனவும் சிறந்த விமானப்படை அதிகாரியாக ஆர்.ஜி.எஸ்.டி கமகேயும் விசேட திறன்வாய்ந்த அதிகாரியாக இரண்டாவது லெப்டினன்ட் ஆர்.எம்.டி.ஜி.பி. ரத்நாயக்கவும் ஜனாதிபதியிடமிருந்து சிறப்பு பரிசுகளைப் பெற்றனர்.

முப்படை அதிகாரிகளுக்கு பாடநெறிகளை பயில்வதற்காக 1981 ஆம் ஆண்டு ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு கற்கைகள் பீடம் நிறுவப்பட்டது. இது 2009 ஆம் ஆண்டில் அப்போதைய பாதுகாப்பு செயலாளராக இருந்த கோட்டபய ராஜபக்ஷயினால் முழுமையான பல்கலைக்கழகமாக மாற்றப்பட்டது. 2009 ஆம் ஆண்டில் சிவில் மாணவர்களுக்கும் பட்டம் பெற வாய்ப்பு கிடைத்தது. தற்போது முப்படைகள் மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டு மாணவர்கள் கலாநிதி, பட்டப்பின்படிப்பு மற்றும் பட்டப்பின்படிப்பு டிப்ளோமா பாடநெறிகளை கற்க வாய்ப்பளிக்கிறது.

ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் குறுகிய காலத்தில் முழு தகுதி வாய்ந்த பல்கலைக்கழகமாக மாறியிருப்பது குறித்து ஜனாதிபதி பாராட்டு தெரிவித்தார். மருத்துவம், பொறியியல் மற்றும் சட்டம் போன்ற துறைகளில் சிறந்து விளங்குகின்றவர்களை உருவாக்கியதன் காரணமாகவே பல்கலைக்கழகம் விரிவடைய காரணமாக அமைந்தது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

தற்போதைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் அரச பல்கலைக்கழங்கள் மற்றும் ஏனைய உயர் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்ற தனியார் துறைக்கு அதிக வாய்ப்புகள் இருக்க வேண்டும். பட்டதாரிகளுக்கு புதிய தொழில்நுட்பத்தைப் பற்றி குறிப்பிட்டளவு அறிவு இருக்க வேண்டும். குறைந்தபட்சம் ஒரு கணினியை இயக்குவதற்கான விடய அறிவு இருக்க வேண்டும் என்பது வெற்றிகரமான எதிர்காலத்தை உருவாக்க உதவும் என்றும் ஜனாதிபதி அவர்கள் கூறினார். கல்வித் துறைகள் எதுவானாலும் அனைத்து துறைகளுக்கும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் கணினி அறிவை அறிமுகப்படுத்துமாறு ஜனாதிபதி அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களிடமும் கேட்டுக்கொண்டார்.

பல்கலைக்கழக கல்விக்கு தெரிவு செய்யப்படும் அனைத்து மாணவர்களும் திறமைவாய்ந்தவர்கள். அவர்கள் பல்கலைக்கழகத்திற்குள் நுழையும்போது அவர்கள் விரும்பும் ஒரு பாடத்தைத் தேர்ந்தெடுப்பதில் குறைபாடு இருந்தால், அது கல்வி முறைமையின் குறைபாடேயன்றி மாணவர்களின் குறைபாடு அல்ல. அனைத்து மாணவர்களுக்கும் பல்கலைக்கழக மட்டத்தை அடைந்தவுடன் அவர்களிடமுள்ள திறன்களை வளர்த்துக் கொள்வதற்கான வசதிகளும் வாய்ப்புகளும் வழங்கப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தித் துறைகளில் அதிக கவனம் செலுத்துவது சர்வதேச அளவில் இலங்கை பல்கலைக்கழகங்களை தரவரிசைப்படுத்துவதில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும். உயர் சாதனையாளர்களை ஈர்க்கவும் தக்கவைக்கவும் பல்கலைக்கழகங்கள் ஒவ்வொன்றுக்கும் இடையில் போட்டித்தன்மை காணப்பட வேண்டும். இது பீடங்கள் அல்லது பணிக்குழாமினருடன் மட்டுப்படுத்தப்படாது, மாணவர்களுக்கும் திறந்திருக்க வேண்டும் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

ஒவ்வொரு பல்கலைக்கழகத்தின் நிர்வாக சபை, துணைவேந்தர், பீடங்கள் மற்றும் பணிக்குழாமினர் தங்கள் கல்வி நிகழ்ச்சித் திட்டங்களைத் தீர்மானிக்க, திட்டமிட மற்றும் நிர்வகிக்க தேவையான சுதந்திரம் இருக்க வேண்டும். அதேபோன்று அவர்களுக்கு தங்கள் நிறுவனங்களில் படிக்க பொருத்தமான மாணவர்களை தெரிவு செய்யவும் சுதந்திரம் இருக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி கூறினார்.

அனைவரும் ஒன்றிணைந்து அர்ப்பணிப்புடன் செயலற்பட்டால், உலகம் வேகமாக மாறினாலும், நமது பல்கலைக்கழகங்களை உலகளவில் போட்டித்தன்மை வாய்ந்த நிறுவனங்களாக மாற்ற முடியும் என்றும், இதன் மூலம் இளைஞர் யுவதிகளுக்கு எதிர்கால முன்னேற்றத்தை வழங்கி நாட்டின் பொருளாதாரத்தையும் வலுப்படுத்த முடியும் என்று ஜனாதிபதி கூறினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.