இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நிராகரிக்குமாறு நட்பு நாடுகளிடம் தினேஸ் குணவர்தன கோரிக்கை!

இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் எந்தவொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும் அதனை எதிர்த்து அனைத்து நாடுகளும் வாக்களிக்க வேண்டுமென இலங்கை வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 46 ஆவது கூட்டத்தொடரின் 2 ஆவது நாளான நேற்று(செவ்வாய்கிழமை) வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன உரையாற்றிய போதே மேற்கண்டவாறு கேட்டுக்கொண்டார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் அறிக்கையை இலங்கைக்கு எதிரான பிரச்சார நடவடிக்கை என தெரிவித்துள்ள, தினேஸ் குணவர்த்தன சர்வதேச குற்றங்கள் குறித்த குற்றச்சாட்டுகளையும் நிராகரித்துள்ளார்

மேலும், இலங்கையானது வாக்குறுதிகளில் இருந்து பின்வாங்கியதாக தெரிவிக்கப்படுவதை நிராகரித்துள்ள அமைச்சர், இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை மனித உரிமை பேரவையின் உறுப்புநாடுகள் நிராகரிக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அத்துடன்,  ஐ.நா. மனித உரிமை பேரவையின் அறிக்கையில் முன்னொருபோதும் இல்லாத பிரச்சார நடவடிக்கை காணப்படுகின்றது.

மூன்று தசாப்தகால யுத்தத்தின் பின்னர் இலங்கையின் வீரமிக்க படையினர் விடுதலைப்புலிகளை செயல் இழக்கச்செய்தனர்.

இலங்கை அரசாங்கம் நாட்டின் ஒருமைப்பாடு, இறைமை, ஆள்புல ஒருமைப்பாடு ஆகியவற்றை உலகின் மிகவும் ஈவிரக்கமற்ற பயங்கரவாத அமைப்பிடமிருந்து பாதுகாப்பதற்காக தற்பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டது எனவும் அவர் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.

அதேநேரம், ஜெனீவாவில் 2015 இல் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இலங்கைக்கு எதிரானது எனவும், நிறைவேற்றப்பட முடியாத விடயங்களை அது உள்ளடக்கியது எனவும் அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த தீர்மானங்கள் இலங்கையின் அரசியலமைப்பிற்கு முரணாணவையாக காணப்பட்டன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு மக்கள் வழங்கிய ஆணை இலங்கை மக்கள் ஜெனிவா தீர்மானத்தை நிராகரித்ததை வெளிப்படுத்தியது என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த ஆணையை அடிப்படையாக வைத்தே இலங்கை இணை அணுசரணை வழங்கிய தீர்மானத்திலிருந்து வெளியேறும் என நான் அறிவித்தேன் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் தினேஸ் குணவர்தன, ஐ.நா. மனித உரிமை பேரவையானது, செவிவழி தகவல்கள், ஒருதலைப்பட்ச நடவடிக்கைகள் அல்லது ஒருகோணத்தை அடிப்படையாக கொண்ட விடயங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் செயற்படக்கூடாது எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மனித உரிமை பேரவை உடனான இலங்கையின் தொடர்ச்சியான ஈடுபாட்டை கருத்தில் கொண்டு இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை நிராகரிப்பதன் மூலம் இலங்கைக்கு ஆதரவளிக்குமாறு உறுப்புநாடுகளை கேட்டுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.