நாடுகளின் ஆதரவை பெறுவதற்காக காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளுடன் பேச்சுவார்த்தை என அரசாங்கம் தற்போது அறிவித்துள்ளது-சுமந்திரன்

ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான விவகாரத்தில் சில நாடுகளின் ஆதரவை பெறுவதற்காக காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளுடன் பேச்சுவார்த்தை என அரசாங்கம் தற்போது அறிவித்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

நேற்று (வெள்ளிக்கிழமை) வவுனியாவில் நடைபெற்ற தமிழ்தேசிய கட்சிகள் மதகுருமார்கள், சிவில் சமூக பிரதிநிதிகள் மத்தியிலான சந்திப்பின் பின்னர் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது எம்.ஏ.சுமந்திரன் மேலும் கூறியுள்ளதாவது, “ஜெனிவா அமர்வில் இலங்கை தொடர்பாக பலநாடுகள் நடுநிலமையைப் பேணும் என்ற ஒரு நிலைப்பாடு காணப்படுகின்றது.

இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்காக இணை அனுசரணை வழங்கும் நாடுகள் பெரும் முயற்சி எடுத்திருக்கின்றன.

அதை நீர்த்துப்போகச் செய்வதற்காகவே இலங்கை அரசாங்கம் கட்டாய ஜனாசா எரிப்பு என்ற விடயத்தை நீக்கியிருக்கிறது. முஸ்லிம் நாடுகள் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கலாம் என்ற எண்ணத்தில் இதனைச் செய்திருக்கிறார்கள்.

ஆனாலும் இஸ்லாமிய நாடுகள் தங்களது நிலைப்பாட்டை மாற்றமாட்டார்கள் என்று நம்புகிறோம்.

அதேபோன்று சில நாடுகளின் ஆதரவைப் பெறுவதற்காக காணாமலாக்கப்பட்டவர்களுடன் கலந்துரையாடல் மேற்கொள்ளப்படும் என தற்போது இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.