கடந்த அரசாங்கம் மக்களை கடனாளியாக்கியது -இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்

ஜனாதிபதியின் நாட்டை கட்டியெலுப்பும் சுபீட்சமான நோக்கு எனும் வேலைத்திட்டத்தின் கீழ் பிரதம மந்திரி மகிந்த ராஜபக்ஸ அவர்களது வழிகாட்டலில் உங்களுக்கு வீடு நாட்டிற்கு எதிர்காலம் எனும் திட்டத்திற்கு அமைவாக கடந்த 2020 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட திட்டத்தின் ஊடாக ஒவ்வொரு கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிற்கும் ஒரு வீடு என்ற அடிப்படையில் நாடு பூராகவும் 16 ஆயிரம் கிராம உத்தியேகத்தர்கள் பிரிவுகளில் வீடுகளை நிர்மானிக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுவருகின்றது.
அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 250 வீடுகள் பூர்த்தி செய்யப்பட்ட நிலையில் மேலும் 43 வீட்டுரிமையாளர்களுக்கான முதற்கட்ட நிதி வழங்கிவைக்கும் நிகழ்வு இன்று (27) கல்லடியில் அமைந்துள்ள மட்டக்களப்பு தேசிய வீடமைப்பு அதிகார சபையில் மாவட்ட காரியாலயத்தில் மாவட்ட முகாமையாளர் கே.ஜெகநாதன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் கலந்துகொண்ட நிகழ்விற்கு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன், பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தனது மக்கள் தொடர்பாடல் அதிகாரி த.ஈஸ்வரராஜா உள்ளிட்ட முற்போக்கு தமிழர் அமைப்பின்  பிரதிநிதிகளும் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது 43 பயனாளிகளுக்கு தலா ஒரு இலட்சம் வீதம் நாற்பத்தி மூவாயிரம் இலட்சம் வழங்கி வைக்கப்பட்டது.
அரசாங்கம் இப்பொழுது வீடமைப்பு சம்பந்தமாக மக்களை கடனாளியாக்காமல் அவர்களுக்குரிய சொந்த வாழ்விடத்தில் வீடை கட்டிக் கொடுக்க வேண்டும் எனும் விடையத்தில் நாட்டினுடைய ஜனாதிபதி மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ஸ அவர்களும் மிகவும் கவனமாக இருக்கின்றார்கள், அதே போன்று வீடமைப்புத் துறைக்கு பொறுப்பாக இருக்கின்ற இராஜாங்க அமைச்சர் இந்திக்க அவர்களிடமும் நாங்கள் பல தடவைகளாக பேசிக்கொண்டு இருக்கின்றோம், பல வீட்டுத் திட்டங்களை நாங்கள் கோரியிருக்கின்றோம். நாங்கள் முன்வைக்கும் எந்தக் கோரிக்கைக்கும் எந்த விதமான மறுப்பும் தெரிவிக்காமல் உண்மையில் வட கிழக்கில் பாதிக்கப்பட்ட மக்களிற்கு பெருமளவான வீட்டுத் திட்டங்களிற்கான தேவைப்பாடு இருக்கின்றது. இப்பொழுது அரசாங்கம் அவற்றிற்கான தீர்வை மிகவும் வேகமாக முன்னெடுத்து வருகின்றது.
அத்தோடு கடந்த அரசாங்க காலத்தில் 12,8000 ஆயிரம் பெறுமதியான, சுமார் 65 ஆயிரம் வீடுகள் வரவிருந்தது அதில் 6 வீடுகளைக் கூட கடந்த அரசாங்கம் கட்டி முடிக்கவில்லை. ஆனால் அந்த வீட்டுத்திட்டத்திலே நாங்கள் மட்டக்களப்பில் 100 வீடுகளை கட்டுவதற்கான அடிக்கற்களை நாங்கள் நாளை அல்லது நாளை மறுதினம் நடுவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம்.
கடந்த ஆட்சி காலத்திலே மக்களுக்கு கிடைக்காமல் தடைப்பட்டிருந்த வீட்டுத் திட்டத்திற்கான வேலைத்திட்டத்தினையும் நாங்கள் இப்போது மிக வேகமாக முன்னெடுத்து வருகின்றோம்.
கடந்த ஆட்சியில் எல்லோரிடமும் இரண்டரை இலட்சம் ரூபாய் பணத்தினை அவர்களிடம் வாங்கி அவர்களுக்கான வீட்டுத்திட்டத்தினை வழங்கினார்கள், மொத்தத்தில் கடந்த அரசாங்க காலத்தில் மக்களை கடனாளியாக்கினார்கள். ஆனால் தற்போதைய அரசாங்கம் அந்த கடனையும் செலுத்துவதற்கான வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றது. ஆகவே கடந்த அரசாங்க காலத்தில் மக்கள் கடனாளியாக்கப்பட்டுள்ளார்கள், ஆனால் தற்போதைய அரசாங்கம் மக்களை கடனில் இருந்து மீட்டுக் கொள்ளும் வேலைத்திட்டத்தினை முன்னெடுத்து வருகின்றதென இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் பயனாளிகளுக்கான காசோலையினை வழங்கி வைத்ததன் பின்னர் ஊடகங்களுக்கு  கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு கூறியிருந்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.