கொழும்பு – டேம் வீதியில் பயணப் பையினுள் சடலத்தை வைத்துச் சென்ற சந்தேகநபர் விஷமருந்தி தற்கொலை!

கொழும்பு – டேம் வீதியில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரான உப பொலிஸ் பரிசோதகர் படல்கும்புர ஐந்தாம் கட்டைப் பகுதியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

அவர் 52 வயதுடைய புத்தளம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய உப பொலிஸ் பரிசோதகர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

அத்துடன் குறித்த நபர் விஷமருந்தி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இதேநேரம், இந்த சம்பவத்தில் உயிரிழந்த பெண் குருவிட்ட பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய திருமணமாகாத பெண் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, நேற்று முன்தினம் பகல் கொழும்பு – டாம் வீதி, ஐந்துலாம்பு சந்திக்கருகில் பயணப் பையிலிருந்து யுவதியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், பயணப் பையிலிருந்து கண்டெடுக்கப்பட்ட யுவதியின் சடலம் ஹங்வெல்ல பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்டமை தெரியவந்தது.

பயணப் பையை வைத்துச் சென்ற நபர் ஹங்வெல்ல பகுதியிலிருந்து 143 பேருந்தில் அதனை எடுத்து வந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

சந்தேகநபர் பயணித்த பேருந்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதையடுத்து, குறித்த பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனரிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின்போதே இந்த தகவல் கிடைக்கப் பெற்றதாக அவர் கூறினார்.

இந்த நிலையில், சமூக வலைத்தளங்கள் மற்றும் செய்திகளில் வௌியாகியுள்ள காணொளியின் அடிப்படையில் சந்தேகநபரை அடையாளம் காணுவோர், பொலிஸாருக்கு தகவல்களை வழங்குமாறும் கோரப்பட்டிருந்தது.

இந்த நிலையிலேயே, பயணப் பையினுள் சடலத்தை வைத்துச் சென்றார் என சந்தேகிக்கப்படும் குறித்த நபர் விஷமருந்தி உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.