தமிழர் தேசத்துக்குப் பெரும் ஏமாற்றம்; ஐ.நாவின் வரைவை நிராகரிக்கிறோம்! – நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அறிக்கை…

“இலங்கைக்கு மேலும் ஒரு காலநீடிப்பை வழங்கி, பொறுப்புக்கூறலை நீர்த்துப் போகச் செய்கின்ற வகையில், ஐ.நா. மனித உரிமைகள் சபையில் சமர்பிக்கப்பட்டுள்ள தீர்மான வரைவை முற்றாக நிராகரிக்கின்றோம். நீதிக்காகப் போராடும் தமிழர் தேசத்துக்கு இது பெருத்த ஏமாற்றத்தைத் தருவதாக அமைகின்றது.”

– இவ்வாறு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தீர்மானம் என அமைந்த முதல் வரைவு தமிழர்களுக்குப் பெருத்த ஏமாற்றத்தை தருவாக அமைந்திருந்த நிலையில், இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்குப் பாரப்படுத்த வேண்டும் என அவர்கள் கோரியிருந்தனர். நேற்று வாக்கெடுப்பு நோக்கிய தமது தீர்மான வரைவை பிரிட்டன் தலைமையிலான கூட்டு நாடுகள் சமர்ப்பித்திருந்தன. எதிர்வரும் 22, 23ஆம் திகதிகளில் வாக்கெடுப்புக்கு வரலாம் எனக் கூறப்படுகின்றது.

இது தொடர்பில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“இலங்கைக்கு மேலும் ஓர் கால நீடிப்பை வழங்குவதாகவே தீர்மான வரைவு அமைந்துள்ளது. அத்துடன் பொறுப்புக்கூறலை நீர்த்துப்போகச் செய்வதாகவும்  அமைகின்றது. இதனை முற்றாக நிராகரிக்கின்றோம். நீதிக்காக ஏங்கும் தமிழர் தேசத்துக்கும், பாதிக்கப்பட்ட மக்களுக்கும் பெருத்த ஏமாற்றத்தையும் இது தருகின்றது.

அரசுகள் தாம் ஒரு தரப்பாக எடுகின்ற முடிவுகள் தொடர்பில், அரசற்ற இனங்கள் சந்திக்ககூடிய, எதிர்கொள்ளக்கூடிய சவால்களை இது வெளிச்சம் போட்டுக்காட்டுகின்றது. புவிசார் அரசியல் வெளியில் நம்மை ஒரு தரப்பாக மாற்ற வேண்டிய மூலோபாயங்களை வகுத்துக் கொள்ள வேண்டிய அவசியத்தையும் இது உணர்த்துகின்றது.

எமக்கான நீதியை வென்றெடுப்பதற்கு ஜெனிவாவுக்கு அப்பாலும், புதிய புதிய களங்களை நோக்கி நாம் செயற்பட வேண்டியவர்களாக இருக்கின்றோம். அத்துடன் ஐ.நாவில் வாக்கெடுப்புக்கு முன்னராக தீர்மான வரைவில் திருத்தங்களை கொண்டுவரக்கூடிய தீவிரமான செயல்முனைப்பிலும் ஈடுபடவுள்ளோம்” – என்றுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.