சுமந்திரனை கட்சியில் வைத்திருந்து தமிழினத்தை அழித்த அவப்பெயரை வரலாற்றில் சூடிக்கொள்ளாதீர்கள்: இரா.சம்பந்தனிற்கு அதிரடி கடிதம்!

கட்சியில் நான் இணைக்கப்பட்ட நாளிலிருந்து கடந்த ஒரு தசாப்தத்துக்கும் மேலாக இன்றுவரை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரான உங்களிடம் ஒரு போதும் எந்தவிதமான வேண்டுகோள்களையும் நான் முன்வைத்தவனல்ல, முன்வைக்கப் போறவனுமல்ல என ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் த.தே.கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அந்த கடிதத்தில் மேலும்,

ஆனால் தமிழ்த் தேசியத்தின் வலிமையான இருப்பின் அவசியத்தைக் கருத்திற்கொண்டு கீழ் காணும் வேண்டுகோள்களை முதலாவதும் இறுதியுமான வேண்டுகோள்களாக முன்வைக்கின்றேன்.

எனது வேண்டுகோள்களை கருதிற்கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் என்ற வகையில் தீர்க்கமான முடிவை எடுக்காவிடின் தமிழ் தேசியத்தினதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் எதிர்காலம் கேள்விக்குறியாகும்.

தங்களின் தலைமைத்துவக் காலத்தில் தமிழரின் அரசில் வல்லமை சிதைக்கப்பட்டது என்ற அவப்பெயரைச் சம்பாதித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்ற வார்த்தைகளை மொழியும் இக்கட்டான தருனத்துக்கு தாங்கள் வந்துவிடக் கூடாது தமிழ் தேசிய கூட்டமைப்பின் எதிர்காலம்?

கட்சிக்கு எவரும் வாக்களிக்கவில்லையெனவும் கட்சி வாக்கால் தான் வெற்றி பெறவில்லையெனவும் தனது தனிப்பட்ட வாக்குகளினாலயே வெற்றி பெற்றதாகவும் ஆப்ரஹாம் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளமை கட்சியின் மீதான மக்களின் நம்பிக்கையையும் அங்கீகாரத்தையும் தரந்தாழ்த்திக் கேவலப்படுத்தும் அகங்காரமிக்க போக்காகும்.

இத்தகைய பொறுப்பற்ற நபர் தொடர்ந்தும் கட்சியில் இருப்பது குறித்து மீள் பரிசீலனை செய்ய வேண்டும்.

பசில் ராஜபக்சவுக்கு ஆதரவளிப்பதான தொனியில் கருத்து வெளியிட்டமை தொடக்கம் தமிழர்களுக்கு எதிராக இனவழிப்பு நடைபெறவில்லை.

கட்சியின் பேச்சாளர் நியமிக்கப்படாத நிலையில் இத்தகு கருத்துகள் கட்சியைப் பாதிப்படையச் செய்வது குறித்து, நாடாளுமன்ற உறுப்பினர் ஆப்ரஹாம் சுமந்திரன் பிரக்ஞையற்றுச் செயற்படுதலானது எவ்வகையிலும் தமிழ் தேசிய அரசியலுக்கு ஆரோக்கியமானதல்ல என்பது மட்டுமின்றி தமிழ் இனம் இந்த நாட்டில் இருந்தது என்பதற்கே அடையாளம் இல்லாமல் செய்யும் செயல்பாடாகும்.

தமிழ் மக்களின் அதிகப் பெரும்பான்மை ஆணையைப் பெற்றுத் தமிழர்களின் தலைமைத்துவத்தைச் சுமந்து திறம்பட வழிநடாத்திய தமிழ் தேசியக் கூட்டமைப்பு கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் ஆணையை இழந்து கொண்டு செல்கின்ற இச்சூழ்நிலையில் அதற்கான காரணங்கள் பற்றிய ஆய்வு மிகவும் முக்கியமானது.

மனந்திறந்த வெளிப்படையான கருத்தாடல் முறைமை செவ்வையான வழியாகத் தோன்றுகின்றது. கட்சியின் பொறுப்பு வாய்ந்த அனைத்து நிர்வாகிகளும் கட்சியைப் பலப்படுத்தி மீளவும் அரசியல் ரீதியில் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி தமிழர்களின் ஏக குரலாக ஒலிப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படத் தயாராக இருக்க வேண்டிய காலத்தில் நாம் இருக்கின்றோம்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெற்ற பின்னர் இன்னும் சரியான முறையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பதவி நிலைகள் உரியவர்களுக்கு அளிக்கப்படாத இடைவெளியில் கட்சியின் இருப்பைச் சிதைக்கும் பல்வேறு கருத்தாடல்கள் தொடர்ந்தும் ஊடகங்களில் பேசுபொருளாக இருப்பதை அவதானிக்கின்றோம்.

அந்த வகையில் மிகவும் வெளிப்படையாகப் பேசுவதுதான் இவ்விடத்தில் எமது கட்சியின் இருப்புக்கும் எதிர்காலத்துக்கும் சிறந்தது என்ற அடிப்படையில் முக்கியமான சில விடயங்களைத் தங்களின் கவனத்துக்குக் கொண்டு வருகின்றேன்.

இன்னும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஓர் ஊடகப் பேச்சாளர் நியமிக்கப்படவில்லை. அப்படிப்பட்ட நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆப்ரஹாம் சுமந்திரன் தன்னைக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் போன்று பிரதிபலித்தபடி தொடர்ந்தும் சர்ச்சையான கருத்துக்களை பொதுவெளியில் தெரிவித்து வருவதாவது கட்சியில் அரசியல் இருப்புக்கும் உறுதிப்பாட்டுக்கும் சவலாக அமைந்துள்ளது.

பசில் ராஜபக்சவுக்கு ஆதரவளிப்பதான தொனியில் கருத்து வெளியிட்டமை தொடக்கம் இப்போது கடைசி யுத்தத்தில் இனவழிப்பு நடைபெறவில்லை என்பது வரையான பொதுவெளிக் கருத்துகள் திரு சுமந்திரன் த.தே.கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் என்ற கோதாவிலேயே தொடர்ச்சியாகப் பரப்புரை செய்யப்பட்டு வந்த நிலையில் 2021ம் ஆண்டு சித்திரை மாதம் 11ம் திகதி கெபிடல் தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் கட்சிக்கு எவரும் வாக்களிக்கவில்லையெனவும் கட்சி வாக்கால் தான் வெற்றி பெறவில்லையெனவும் தனது தனிப்பட்ட வாக்குகளினாலயே வெற்றி பெற்றதாகவும் குறிப்பிட்டுள்ளமை கட்சியின் மீதான மக்களின் நம்பிக்கையையும் அங்கீகாரத்தையும் தரந்தாழ்த்திக் கேவலப்படுத்தும் அகங்காரமிக்க போக்காகும்.

இத்தகைய பொறுப்பற்ற நபர் தொடர்ந்தும் கட்சியில் இருப்பது குறித்து மீள் பரிசீலனை செய்ய வேண்டும்.

கட்சி தோல்வி அடைந்துவிட்டது என கட்சிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் சட்டரீதியற்ற பேச்சாளனாக செயற்பட்டு கட்சியை இல்லாதொழிக்கும் ஆப்ரஹாம் சுமந்திரனின் இந்தச் செயல்பாட்டில் ஒன்றியிருக்கும் நிகழ்சி நிரலின் பின்ணனி என்ன?

ஆப்ரஹாம் சுமந்திரனினால் தனிப்பட்ட கருத்துகளாக முன்வைக்கப்படும் கருத்துக்கள் கட்சியின் கருத்தாக பிரதிபலிக்கச் செய்யப்படுவதும் மக்கள் அதை அப்படியே உள்வாங்கிக் கொள்வதும் கூட்டமைப்பின் வாக்கு வங்கியை தொடர்ந்தும் சிதைப்பது மட்டுமின்றி தமிழ் தேசிய கூட்டமைப்பை இல்லாதொழிக்கும் பாரிய பணியைச் செய்யும் செயற்பாடுமாகும்.

குறித்த நபர் கூட்டமைப்பின் பேச்சாளர் அல்ல என்பதை கூட்டமைப்பின் தலைவர் என்ற வகையில் நீங்கள் விரைவாக ஊடக அறிக்கையொன்றினை சமர்ப்பித்து குறித்த நபரால் ஏற்படுத்தப்பட்ட களங்கத்தையும் நற்பெயருக்கு ஏற்பட்ட சிதைவையும் ஓரளவுக்காவது சரிசெய்வதுடன் பொருத்தமான தமிழ் தேசிய உணர்வாளர் ஒருவரை கட்சியின் பேச்சாளராக நியமிப்பதனூடாக இக்காரியத்தை இன்னும் திறம்படச் செய்ய முடியுமாக இருக்கும்.

தலைமைத்துவத்தை மீறி தலைமையின் செல்வாக்கைக் கேள்விக்குள்ளாக்கி விகடமாக்கிடும் குறித்த செயற்பாட்டை உடனடியாகத் தடுத்து நிறுத்தி.

கட்சியின் பலத்தை மீளவும் நிலைபெறச் செய்ய தாங்கள் விரைந்து நடவடிக்கை எடுப்பீர்கள் என்று திடமாக நம்புகின்றோம்.

ஒரு தனி நபரின் தன்னிச்சையான செயற்பாடுகளும் கருத்துகளும் இதற்கு முந்தியொருபோதும் இப்படிக் கட்சிக்கு அபகீர்த்தியை ஏற்படுத்திடவில்லை.

மக்களின் நம்பிக்கையை வென்று மேலும் கட்சியின் ஸ்திரப்பாட்டை நிலைப்படுத்த தலைமைத்துவம் வேகமாகச் செயற்படும் என்ற எதிர்பார்ப்பு வீண் போகாது என்றே நம்புகின்றோம்.

ஆப்ரஹாம் சுமந்திரன் கட்சியின் ஊடகப் பேச்சாளராக இருந்த போது தமிழ் மக்களின் விருப்பத்திற்கும் எதிர்பார்ப்பிற்கும் நேர்மாறாக தெரிவித்த சில கருத்துகள் மக்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்திய போது அக் கருத்துக்கள் கட்சியின் கருத்துகளல்ல, அவை அவரது தனிப்பட்ட கருத்துகளே என்று நீங்களே அறிக்கையிட்டும் தொலைக்காட்சி நேர்காணலிலும் வெளிப்படையாகக் கருத்துத் தெரிவித்த சந்தர்ப்பத்தையும் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகின்றேன்.

கடந்த ஒரு தசாப்தத்துக்கும் மேலாக கட்சியில் எதிர்பார்ப்புகள் ஏதுமின்றி எனது பங்கினை ஆற்றி வருகின்றேன்.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கட்சியில் உள்ள ஏதேனுமொரு பதவி நிலையைக் கோரியோ அல்லது தேர்தல் காலத்தில் போட்டிடுவதற்கு இடமொதுக்கக் கோரியோ அல்லது தேசிய பட்டியலில் நியமிக்கும்படியோ ஒரு போதும் நான் எனக்காக தலைவர் என்ற வகையில் உங்களிடமோ அல்லது வேறு நிருவாகிகளிடமோ விண்ணப்பஞ் செய்ததில்லை தமிழமக்களின் உணர்வுகளுக்காகவே முழுமையாக எந்த எதிர்பார்ப்புமின்றி கட்சியை நேசிக்கின்றேன்.

அந்த அடிப்படையில் கட்சியின் இருப்பு மீது எனக்கு அதீதமான அக்கறை இருப்பது இயல்பானதே. ஆகவேதான் ஒற்றை நபருக்காகக் கட்சியை அடமானம் வைக்கத் தேவையில்லை என்ற நிலைப்பாட்டில் கட்சியினுள்ளே பலர் இருப்பதை தலைமையின் கவனத்துக்குக் கொண்டுவர வேண்டியது எனது கடமையுமாகும்.

அடுத்து வரும் தேர்தலினைச் சந்திப்பதற்கு முன்னரே பொறுப்புள்ள நிர்வாகிகள் கட்டமைப்பை உருவாக்கி அதன் மூலம் காத்திரமான செயற்பாடுகளை முன்னெடுத்து சரிவிலிருந்து கட்சியைப் பாதுகாத்து மக்கள் உரிமைக்கான ஏக குரலாக கூட்டமைப்பு திகழ்வதை நாம் உறுதிப்படுத்தியாக வேண்டும்.

மோசமான விமர்சனங்கள் நாளுக்கு நாள் கட்சியின் நற்பெயரைச் சிதைத்துக்கொண்டே இருக்கின்றது என்பதையும் தங்களின் மேலான கவனத்துக்குக் கொண்டு வருகின்றேன். தந்தை செல்வா முதற்கொண்டு இப்போது வரைக்குமான காலத்தில் தமிழர்களின் ஒற்றைக்குரலாக நமது குரல் இருந்துள்ளது.

பலமிக்க நிலையில் அதை மீளவும் நிலைநிறுத்தி உறுதிப்படுத்தி கொள்வது காலத்தின் கட்டாயமாகும். இதன் அவசரத்தையும் அவசியத்தையும் உணர்ந்து தீர்க்கமான முடிவொன்றினை விரைவாக தலைமை எடுக்க வேண்டுமென்று அவாவி நிற்கின்றேன்.

இவ்விடயத்தை கருதிற்கொண்டு தீர்க்கமான முடிவை எடுக்காவிடின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்காலம் கேள்விக்குறியாகும். தங்களின் தலைமைத்துவக் காலத்தில் தமிழரின் அரசில் வல்லமை சிதைக்கப்பட்டது என்ற அவப்பெயரைச் சம்பாதித்துவிடக்கூடாது கடந்த கால நெருக்கடி நேரத்தில் அரசியலில் ஆக்ரோசமிக்க தமிழரின் குரலாக நீங்கள் இருந்துள்ளீர்கள்.

இறுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்ற வார்த்தைகளை மொழியும் இக்கட்டான தருனத்துக்கு தாங்கள் வந்துவிடக் கூடாது என்ற நன்னோக்கைப் புரிந்துகொள்வீர்கள் என்று நினைக்கின்றேன். ஏனெனில் மக்கள் அப்படியொரு பிரயோகத்தை தங்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லை.

இந்த இக்கட்டான நிலையில் தங்களின் கடமையைச் சரியாகச் செய்யாவிட்டால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற வரலாறு இறுதி அத்தியாயத்தை எழுதிக்கொள்ளும் என்பதைத் தாங்களும் நன்கு அறிவீர்கள்.

அவ்வாறு நிகழ்ந்தால் அந்த வரலாற்றுத் தவறுக்குப் பொறுப்பாளியாக தாங்களே இருக்க நேரிடும் என்பதையும் புரிந்து வைத்திருப்பீர்கள். அத்தகைய வரலாற்றுத் தவறையல்ல வரலாற்றுத் தப்பை தாங்கள் செய்ய மாட்டீர்கள் என்று திடமாக நம்புகின்றேன்.

தமிழ்த் தேசியத்தின் வலிமையான இருப்பின் அவசியத்தைக் கருதி இந்த விடயத்தில் மேலதிக கால விரயத்தைத் தவிர்த்து விரைவாக முடிவெடுக்கும் படி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன் என தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.