தமிழர் வரலாறுகளை சிங்கள வரலாறுகளாக மாற்றுவதில் சிங்களம் தலயாய முயற்சி! சிறீதரன் எம்.பி குற்றச்சாட்டு

தமிழர் வரலாறுகளை சிங்கள வரலாறுகளாக மாற்றுவதில் சிங்களம் தலயாய முயற்சிப்பதாகவும், இராவணனைக்கூட இராவணவலவேகய எனும் சிங்கள அரசனாக காண்பிக்க முயற்சிப்பதாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இடம்பெற்ற நூல் வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இலங்கையில் சித்திரபாடத்தினை எடுத்தால் சித்திரபாடத்தில் பல சொற்கள் எல்லாம் சிங்களத்தில்தான் சொல்லப்படுகின்றது. சித்திரபாடத்தில் இருக்கின்ற தமிழ் வரலாறுகள் அழிக்கப்படுகின்றது. காசியப்பனின் காலம், சிகிரியாவின் மலைகூட சிவபெருமானையும், உமாதேவியாரையும் குறிப்பிடுகின்ற சிற்பங்கள் எல்லாம் இன்று சிங்கள முனிவர்களிற்குரியதாக அல்லது சிங்கள கலைஞர்களிற்குரியதாக மாற்றிவிட்டார்கள்.

எந்தவொரு சித்திர நூலைத்திறந்தாலும் அங்கு சிங்கள கலைதான் காணப்படுகின்றது. இலங்கையில் எங்களிற்கு இருந்த கலைகளும், எங்களிற்கான சந்தர்ப்பங்களும் இல்லாமலே போய்விட்டது. நாங்கள் மூன்றாம் வகுப்பு படிக்கின்றபோது பண்டார வன்னியன், சங்கிலியன் பற்றி படங்கள் ஊடாக படித்தோம். பண்டாரவன்னியனின் நிலைனவுக்கல்லை புத்தகத்தின் ஊடாக பார்த்திருக்கிறோம்.

அதேபோல சங்கிலிய மன்னனின் சிலையோடு படங்கள் ஊடாக பாடத்திலே படித்திருக்கின்றோம். சமயப்புத்தகங்களில்கூட படித்தோம். இன்று பண்டாரவன்னியனை பிள்ளைகள் படிப்பதில்லை. சங்கிலிய மன்னனை மறைத்துவிட்டார்கள். நாங்களே எங்கள் வரலாறுகளை தேடிக்கொண்டிருக்கின்றோம்..

ஆனால் எங்கள் வரலாறுகளை சிங்கள வரலாறுகளாக மாற்றுவதில் சிங்களம் தன்னுடைய பெரிய தலயாய வேலையை செய்துகொண்டிருக்கின்றது. இராவணனைக்கூட ஒரு சிங்கள அரசனாக இராவண வலவேகய என்ற சிங்கள பெயரோடு நாட்டுக்குள் கொண்டுவர முயற்சிக்கின்றார்கள்.

நாங்களும் எங்களுக்குள் இருக்கின்ற பயங்களின் அடிப்படையில் விட்டுவிடுகின்றோம். ஒருகாலத்திலே ராஜராஜசோழன், இராஜேந்திர சோழன், அல்லது கரிகாலன், சேரசோழ மன்னன் எல்லாம் தங்களுடைய கொடிகளிலே புலிகளையும், மீன்களையும் பறக்கவிட்ட காலங்களை நாங்கள் பார்த்திருக்கின்றோம்.

பிற்பட்ட காலத்திலே நாங்கள் கொண்டிருந்தாலும்கூட சொல்லமுடியாத மனிதர்களாக நாங்கள் வாழுகின்றோம். இன்றும்கூட வரலாற்று புத்தகங்களை எடுத்துப்பார்த்தால் இலங்கையில் தரம் 6 முதல் 11 வரை வரும் வரலாற்றில்கூட தமிழர்களின் வரலாறு திட்டமிட்டே மறைக்கப்பட்டிருக்கின்றது. அந்த வரலாறுகள் இல்லாமலே செய்யப்பட்டிருக்கின்றது.

தமிழீழ விடுதலைப்புலிகள் இந்த மண்ணிலே இருந்தபொழுது கல்விக்கழகத்தின் ஊடாக தமிழின வரலாறு என்கின்ற ஒரு செய்தி எங்கள் பிள்ளைகளிற்கு சொல்ல்பட்டது. அதேபோலதான் இந்த சித்திர புத்தகத்தை நான் பார்த்தபொழுது கேட்கப்படுகின்ற ஒவ்வொரு கேள்விகளும் சிங்கள பெயர்களாகவே சொல்லவேண்டி நிலை எங்கள் பிள்ளைகளிற்கு ஏற்பட்டுள்ளது.

ஆனாலும், இன்றுள்ள ஆசிரியர்கள், கலைஞர்கள் ஊடாக இன்றும் எங்கள் பிள்ளைகள் மத்தியில் இவற்றை நாங்கள் கொண்டு செல்கின்றோம்.ஆகவே எங்களுடைய கலைகளையு்ம, வரலாறுகளையும் காப்பாற்றவேண்டிய கடமை கல்விமான்களையும், கல்வியலாளர்களையும் சார்ந்தது.

நாங்கள் ஒடுங்கி ஒடுங்கி பயந்து தலைகுனிந்து வாழ்ந்தோம்.வாழ்கின்றோம். அதனால் இன்னுமின்னும் எங்களுடைய வரலாற்றை தொலைத்துக்கொண்டே போகின்றோம். எங்களுடைய வரலாறு எங்களிடமிருந்து தள்ளிப்புாகின்றது.

இன்னும் 10 ஆண்டுகள் போனால் எங்கள் சந்ததிக்கு சொல்வதற்கு வேறு வேறு செய்திகள்தான் சொல்ல வேண்டி ஏற்படும். வரலாறுகள் எல்லாம் மாற்றி எழுதப்படும். குறிப்பாக வெடுக்குநாறி மலையிலே தமிழ் கல்வெட்டுக்களை வாசிப்பதற்கு சிங்கள அரசு தயாராக இல்லை.

குறுந்தூர் மலையிலே கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கத்தை ஒரு தூணாகவே சித்தரித்து மாற்ற முனைகின்றார்கள். உருத்திரபுரத்திலே 4000 ஆண்டுகள் கடந்து சிவாலய வளாகத்திலே சிங்கள பௌத்த அடையாளங்களை காண்பிக்க முயற்சிக்கின்றார்கள்.

கந்தரோடையில் இருக்கின்ற பௌத்த அடையாளங்கள், தமிழ் பௌத்த அடையாளங்களை தோண்டினால் தமிழ் பௌத்த அடையாளங்கள்தான் வரும் என்பதற்காக தோண்டாமலே விட்டிருக்கின்றார்கள். ஆய்வே செய்ய பயப்படுகின்றார்கள்.

ஆகவே நாங்கள் தமிழ் பௌத்தர்களாகவும் இந்த மண்ணிலே வாழ்ந்திருக்கின்றோம். தமி்ழை நேசித்த மனிதர்களாக இருந்திருக்கின்றோம். தமிழப்பிராமிய எழுத்துக்கள்தான் இங்கு இருந்திருக்கின்றன. வரலாறு எங்களுக்கு முன்னாளே பல்வேறுபட்டவர்களை தந்திருக்கின்றது.

நாங்கள் பல வரலாற்று அடையாளங்களை கண்டவர்கள். நாகர், இயக்கர் என்ற இனம்தான் இலங்கையில் முதல் முதல் இருந்ததாக வரலாறு சொல்கின்றது. அதிலும் இயக்கர்களிற்கான வரலாறு கொஞ்சம் தள்ளிப்போனாலும், நாகர்கள் எனும் வரலாற்றில் பல்வேறுபட்ட விடயங்களை நாங்கள் பார்க்கின்றோம்.

நாங்கள் வாழும் பிரதேசத்தில்கூட பூநகரியில் நாகதேவன்துறை, இந்தியாவில் நாகப்பட்டினம், நாகலாந்து போன்ற இடங்கள் எல்லம் எங்களுடைய இனங்கள் வாழ்ந்த இடங்களாகவே சொல்லப்படுகின்றது.

புளியம்பொக்கனை நாகதம்பிரான், பதூர் நாகதம்பிரான் என அண்மையில்கூட பொலநறுவையிலே 108 ஈமத்தலிகளை எடுத்திருக்கின்றார்கள். நாகர் காலத்திலே புதைக்கப்பட்ட ஈமதாலிகள். அந்த ஈமதாலிகளை நாகபாம்புகளே பாதுகாத்ததாக காண்பித்திருக்கின்றார்கள்.

நாகருடைய 7000 ஆண்டுகளிற்குரிய ஈமதாலிகள் என்றுதான் வரலாறு சொல்கின்றது. அது உண்மையிலே வெளியே வருமாக இருந்தால் இங்கு தமிழர்கள் எவ்வாறு வாழ்ந்திருக்கின்றார்கள் என்பதற்கு அது ஒரு அடையாளமாக இருக்கும்.

ஆகவே இந்த வரலாறுகளையு்ம, அடையாளங்களையும் தொலைத்து இந்த மண்ணிலே நாங்கள் நிர்க்கதியாக வாழ்கின்ற இந்தக்காலத்திலே வரலாறுகளை சொல்லிக்கொடுக்க அனைவரும் முன்வரவேண்டும் என அவர் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.