தமிழகத்தின் புதிய ஆட்சியை வாழ்த்தி வரவேற்போம்  – மனோ கணேசன்

தமிழகத்தின் ஆளும் கட்சியையும், தமிழக முதல்வரையும் வாழ்த்தி வரவேற்க தயாராவோம்  என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மனோ எம்பி மேலும் கூறியுள்ளதாவது,

தமிழக தேர்தல் முடிவுகளில் நேரடியாக தலையிட, நாம் அங்கே வாக்காளர்கள் அல்ல. ஆனால் அதுபற்றி நாம் கண்டுக்கொள்ளாமல் இருக்க முடியாது. என்னை பொறுத்தவரையில் இலங்கை எமது தாய்நாடு. இந்திய தமிழகம் எங்கள் தந்தையர் நாடு.

அறிஞர் அண்ணா உருவாக்கி, மறைந்த முன்னாள் முதல்வர், கலைஞர் முத்துவேலு கருணாநிதி வளர்த்து விட்ட திராவிட முன்னேற்ற கழகத்துக்கும், புரட்சி தலைவர் எம்.ஜி. ராமச்சந்திரன் உருவாக்கி, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் வளர்த்து விட்ட  அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்துக்கும் இடையில்தான் ஆரம்பத்தில் இருந்தே பிரதான போட்டி. ஏனைய அனைத்து கட்சிகளும் துணை அரசியல் பாத்திரங்களையே வகிக்கின்றன.

தமிழக உடன் பிறப்புகள் தரும் ஜனநாயக முடிவுகளை ஏற்று அதை எப்படி எமக்கு பயனுள்ளதாக மாற்றிக்கொள்ள முடியும் என்பதை மட்டுமே, இலங்கையில் நாம் கணிக்க வேண்டும்.

மற்றபடி, தேர்தல் காலத்திலும் சரி, இன்றைய முடிவுகளின் போதும் சரி, தமிழக அரசியல் கட்சிகளை பற்றி, தமிழக அரசியல் தலைவர்களை பற்றி, தரக்குறைவாக பண்பற்று பேசி எமது உணர்வுகளை நாம் கொட்டக்கூடாது.

அப்படி ஆத்திரப்படும் அளவுக்கு, நமது நாட்டு தமிழ் அரசியல் தலைமைகளும், வரலாறு முழுக்க ஏதோ பிழையே செய்யாத அதி உத்தம யோக்கியர்களுமல்ல என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். இந்தியா தொடர்பில் நமது கட்சிகள், அமைப்புகள் பல தவறுகளை வரலாற்றில் செய்துள்ளன.

இலங்கையில் வாழும் ஒட்டுமொத்த தமிழர் பிரச்சினை என்பது, தமிழக மக்கள் முன்னாலே உள்ள பல்வேறு பிரச்சினைகளில் ஒன்றாகும். அங்கு வாழும் சுமார் எட்டு கோடி தமிழர், எமது உடன்பிறப்புகள். அந்த எட்டுக்கோடி என்பது எமது பாதுகாப்பு கவசம். கடந்த காலங்களில் அந்த பாதுகாப்பு கவசம் சரியாக பயன்படாமல் போய் விட்டது. இதற்கான காரணங்கள் பல.  அவற்றை ஆராய்வது இப்போது உசிதமானதல்ல.

ஆகவே, கடந்த காலங்களை மறந்து விட்டு, தமிழகத்தின் ஆளும் கட்சியையும், தமிழக முதல்வரையும்  வாழ்த்தி வரவேற்போம்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.