ஜனாதிபதி நினைப்பதையெல்லாம் பிரயோக ரீதியில் நடத்திவிட முடியாது…

உரத்தடையின் மூலம் எமது நாட்டின் பொருளாதாரம் நிச்சயம் வீழ்ச்சியடையும். இன்றைய நிலையில் நாம் நம்பியிருக்கின்ற உற்பத்தி அரிசியும், ஒரு பாதி தேங்காயுமேயாகும். அதுவும் இல்லாமல் இறக்குமதி செய்யும் நிலைமைக்கே நாடு வந்து சேரும். ஜனாதிபதி நினைப்பதையெல்லாம் பிரயோக ரீதியில் நடத்திவிட முடியாது. என மட்டக்களப்பு மாவட்ட விவசாய சம்மேளனத்தின் தலைவர் நடேசன் சுந்தரேசன்
தெரிவித்தார்.
மட்டு ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்று எமது மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளுக்கு எவ்வித உதவிகளும் இல்லை. மருந்து வகைகக், கிருமிநாசினிகள் கூட வழங்கப்படவில்லை. பசளையும், உரமருந்துகளும் இல்லாமல் மிகவும் கஸ்டமான நிலையை எதிர்நோக்கி இருக்கின்றார்கள். இது தொடர்பில் அரசாங்கத்திடம் தெரிவித்தால் அவர்கள் இயற்கை உரத்தையே பாவிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகின்றார்கள். இத்தனை காலங்களும் நாங்கள் செயற்கை உரங்களையே பாவித்து வந்தோம். அது உடலுக்குக் கேடானதுதான். கடந்த அரசாங்க காலத்தின் போது இவ்விடயத்தை நாங்கள் கூறி இயற்கை உரம் பற்றியும் கூறியிருந்தோம். ஆனால் அந்த அரசாங்கம் இதனைக் கவனத்தில் கொள்ளவில்லை. இயற்கை உரப் பாவணை விடயத்தைச் சிறிது சிறிதாகவே நடைமுறைப்படுத்த வேண்டுமே தவிர திடீரென நடைமுறைப்படுத்த முடியாது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 90 வீதமான நிலங்கள் பசளையற்ற நிலங்களாகவே காணப்படுகின்றன. இதற்கு நாங்கள் பசளைகளைப் போட்டுத்தான் பயிர்களை உருவாக்க முடியும். இந்த நிலையில் எமது மாவட்டத்திற்கு உரமானது நிச்சயமாகத் தேவையான ஒன்று. எனவே இந்த உரத்தை அரசாங்கத்திற்கு வழங்க வக்கில்லாது விட்டால். எமக்குத் தரவேண்டிய மானிய உரத்தையாவது காசுக்குத் தருமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
இந்த உரம் வழங்கும் செயற்பாடு நிறுத்தப்பட்டமையானது 60 வீதமான விவசாயிகளைக் கொண்ட இந்த நாட்டிலே விவசாயிகளின் தொழில் முயற்சிகள் இல்லாமல் போவது மாத்திரமல்லாமல், இலங்கைக்குத் தேவையான முப்பதின் ஒரு பங்கு நெல் உற்பத்தியும் இல்லாமல் போகும்.
திடீரென இயற்கை உரத்தைப் பயன்படுத்துவதால் விளைச்சல் மிகவும் குறைந்த நிலையில் தான் காணப்படும். அதாவது ஒரு கிலோ நெல் சுமார் 250 ரூபாவிற்குக் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும். இயற்கை உரத்தில் நைற்றஜன் தன்மை மிகக் குறைவு நைற்றஜன் தேவை என்றால் யூரியா பயன்படுத்தியே ஆக வேண்டும். நைற்றஜனை நம்பியே விவசாயிகள் வாழுகின்றார்கள்.
இது தொடர்பில் அரசுடன் உள்ள அரசியல்வாதிகளும் கண்டுகொள்கின்றார்கள் இல்லை. அவர்கள் தொடர்பில் மிகவும் வேதனையாகத்தான் இருக்கின்றது. அங்கு ஜனாதிபதி என்ன சொல்கின்றாரோ அதைத்தான் இவர்களும் சொல்வார்கள். இவர்கள் இதனை விளங்கப்படுத்தி, எமது மண்ணை ஆராய்ந்து, பரிசோதனை அறிக்கையை அவரிடம் கொண்டு சென்று,  எமது விவசாயிகளின் உரத் தேவையை அவருக்குத் தெளிவுபடுத்தும் தன்மை அவர்களுக்கு இருக்குமோ தெரியாது.
இவ்வாறு உரத்தடையின் மூலம் எமது நாட்டின் பொருளாதாரம் நிச்சயம் வீழ்ச்சியடையும். இன்றைய நிலையில் நாம் நம்பியிருக்கின்ற உற்பத்தி அரிசியும், ஒரு பாதி தேங்காயுமேயாகும். அதுவும் இல்லாமல் இறக்குமதி செய்யும் நிலைமைக்கே நாடு வந்து சேரும்.
எவ்வாறு புதிய நெல்லினங்களை உற்பத்தி செய்தாலும், அவற்றால் நீரைக் குறைத்துப் பாவிப்பது, சில உரப் பாவணைகள் இல்லாமல் இருக்குமே தவிர தனித்து இயற்கை உரத்தில் உற்பத்தி என்ற நிலையை உருவாக்காது. ஏனெனில் நைற்றஜன் இல்லாவிட்டால் நெல் மஞ்சள் அடித்து நெல் உற்பத்தி மிகவும் வீழ்ச்சியடையும்.
இவ்வாறு உரம் நிறுத்தப்பட்டமையால் மட்டக்களப்பு மாவட்டத்தில் நேரடியாக விவசாயத்தில் ஈடுபடும் 40 வீதமான விவசாயிகளும், மறைமுகமாக 20 வீதமான விவசாயிகளுமாக மொத்தம் 60 வீதமான விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள்.
ஜனாதிபதி நினைத்துக் கொண்டார் காலையில் மரவள்ளி நாட்டினால் மாலையில் மரவள்ளிக் கிழங்கு எடுக்கலாம் என்று. இவை திடீரென்று செய்யக் கூடிய விடயம் அல்ல. மஞ்சள் இறக்குமதியை முற்றாக நிறுத்திவிட்டு தான் செல்லும் இடங்களுக்கெல்லாம் மஞ்சள் கன்றுகளை வழங்குகின்றார். அந்தச் செடிகள் எப்போது வளர்ந்து நாம் எப்போது மஞ்சள் உபயோகிப்பது. மஞ்சள் இறக்குமதியைப் பாதியாகக் குறைத்துவிட்டு இவ்வாறன செயற்பாடுகளை முன்னெடுத்திருக்க வேண்டும். மஞ்சள் என்பது ஒரு மருத்துவப் பொருள். இதனைத் தடை செய்ததென்பது மிகவும் கொடூரமான செயல். எனவே ஜனாதிபதி நினைப்பதையெல்லாம் பிரயோக ரீதியில் நடத்திவிட முடியாது.
எனவே இவ்வாறான நிலைமைகளைக் கருத்திற்கொண்டு தற்போதைய நிலையினைச் சமாளிப்பதற்காகவாவது எமக்கு இரசாயண உரங்களை வழங்குவதோடு, இந்த இரசாயண உரப் பாவணையை எவ்வாறு குறைப்பது என்று நன்கு திட்டமிட்டு இதனை கட்டம் கட்டமாக ஐந்து வருடங்களுக்குள் குறைத்து இயற்கை உரத்தை உற்பத்தியாக்கும் முறைமையைச் சீனாவில் இருந்து அறிந்து இயற்கை உர உற்பத்தியை உருவாக்கிய பின் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.