றிஸாத்தின் கைதுக்கு எதிராக காரைதீவு பிரதேச சபையில் கண்டன உரைகள்

(நூருள் ஹுதா உமர்)
ஈஸ்டர் தாக்குதலினுடன்  சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை இனங்காண்பதற்காக அமைக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டவர்களுக்கு எதிராக எந்தவித சட்ட நடவடிக்கையும் எடுக்காமல் , வெறுமனே அரசியல் நோக்கங்களுக்காக, எந்தக் குற்றமும் இழைக்காத, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனை நள்ளிரவில் அவரது வீட்டுக்குச் சென்று சபாநாயகருக்கும் கூட அறிவிக்காது, எந்தவித பிடியாணையும் இல்லாமல் கொள்ளைக்காரனை போல கைதுசெய்திருப்பதானது வன்மையாகக் கண்டிக்கப்படக்கூடியது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சார்பிலான காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் முஸ்தபா ஜலீல் தனது கண்டன உரையில் தெரிவித்தார்.
காரைதீவு பிரதேச சபை அமர்வு கடந்த புதன்கிழமை சபா மண்டபத்தில் தவிசாளர் கி. ஜெயஸ்ரீரில் தலைமையில் நடைபெற்றபோது அங்கு விசேட பிரேரணையாக அண்மையில் கைதாகி தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்கள் காங்கிரசின் தலைவரின் கைதுக்கு எதிரான கண்டன தீர்மான பிரேரணையில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் உரையாடிய அவர், இந்தப் புனித ரமழான் மாதத்தில் தலைவரின் கைது மிகவும் வேதனையைத் தருகின்ற விடயமாக இருக்கிறது. குற்றவாளிகளைக் கண்டு பிடிக்கிறோம் என்ற தோரணையில் மீண்டும் மீண்டும் முஸ்லிம் சமூகத்தை நோக்கி – முஸ்லிம் தலைமைகளை நோக்கி முஸ்லிம் புத்திஜீவிகளை நோக்கிச் செய்யப்படுகின்ற அபாண்டமாக பலி சுமத்துகின்ற ஆட்சியாளர்களின் அல்லது அதிகாரிகளின் போக்கு மாற்றப்படவேண்டும் . சகல இனங்களும் ஒன்றாக வாழ்வதற்கான சூழலை உருவாக்கி நாட்டை கட்டியெழுப்பத் தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கவேண்டுமே அல்லாமல், எந்தக் குற்றமும் இழைக்காத முன்னாள் அமைச்சரை தொடர்ச்சியாக அரசியல் இலாபங்களுக்காக கைது செய்வதையும் , விசாரணை செய்வதையும் உடனடியாக நிறுத்தவேண்டும் என்றார்.
இங்கு கண்டன உரை நிகழ்த்திய பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஆர்.எம். பஸ்மீர், இனவாதத்தை விதைத்து , இனங்களுக்கிடையான விரிசலை ஏற்படுத்திய பலரும் சுயாதீனமாக சுற்றுத்திரியும் நிலையிலும் இனங்களுக்கிடையில் ஒற்றுமையை விதைத்த தலைவர் ரிஷாட் பதியுதீன் முன்னர் பல்வேறு சந்தர்ப்பங்களில் குற்றவியல் புலனாய்வுப் பிரிவினரின் அழைப்பை ஏற்று , அங்கு சென்று தாது சாட்சியங்களை தொடர்ச்சியாக வழங்கி அரச விசாரணைகளுக்கு ஒத்துழைப்பையும் வழங்கி வந்தார் . இந்தத் தாக்குதலின் உண்மையான சூத்திரதாரியை கண்டறிய வேண்டு மென்பதில் மிகவும் கரிசனையுடன் செயற்பட்டு அதற்குத் தேவையான தகவல்களையும் குற்றவியல் புலனாய்வுப் பிரிவுக்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் வழங்கியுமுள்ளார். இவ்வாறு பூரண ஒத்துழைப்பை வழங்கிய முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை நடுநிசியில் கைது செய்யவேண்டியதன் அவசியம் என்ன ?  இது அரசியல் ஆதாயத்திற்காகவும், ஒரு மக்கள் குழுவை திருப்திப்படுத்துவதற்கும் செய்யப்படும் செயலாகவே கண்டு கொள்ளமுடிகிறது என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.