இத்தகைய செயற்பாடுகள் மூலம் எம்மை அடக்க, ஒடுக்க, முடக்க முடியாது… (முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் – ஞா.சிறிநேசன்)

தமிழர்களின் உயிர், உரிமை பறிக்கப்பட்டிருக்கின்றது, உடலங்கள் தொலைக்கப்பட்டும், அழிக்கப்பட்டும் இருக்கின்றது. இன்று எமது மக்களின் உணர்வுகளோடு விளையாடுகின்ற செயற்பாடு நடைபெறுகின்றது. இத்தகைய செயற்பாடுகள் மூலம் எம்மை அடக்க, ஒடுக்க, முடக்க முடியாது என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.
முள்ளிவாய்க்கால் நினைவுத்துபி உடைக்கப்பட்டமை தொடர்பான கண்டன அறிக்கையிலேயே அவ இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

இறுதி யுத்தத்தின்போது ஒரு லெட்சத்திற்கு நாற்பதாயிரத்திற்கு மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டிருப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. தரிஸ்மன் அறிக்கை, கற்றறிந்த பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை என்பனவும் தெரிவித்திருக்கின்றன அதேபோன்று எமது மறைந்த ஆயர் இராயப்பு ஜோசப் அவர்களும் சாட்சியம் வழங்கியிருக்கின்றார். அந்த வடுவின் ஞாபகார்த்தமாக முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்ட நினைவுத் தூபி கடந்த 12ம் திகதி இரவு வேளையில் திட்டமிட்ட வகையில் உடைக்கப்பட்டிருக்கின்றது.

அதற்கு முன்பாக எமது அருட்தந்தையர்கள் சிலர் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி எமது துயரை நினைவுபடுத்தும் முகமாக ஒரு நடுகல்லினை நடுவதற்காக நடவடிக்கை மேற்கொண்ட போது அவ்விடத்தில் பொலிசாரும், இராணுவத்தினரும் அவர்களுடன் தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து அப்பகுதி பொலிசார், இராணுவத்தின் பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது. அதன் பின் காலையில் எமக்குக் கிடைத்த செய்தி அங்கு நினைவுத் தூபி தகர்க்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது அருட்தந்தையர்களால் கொண்டு செல்லப்பட்ட நடுகல்லும் களவாடப்பட்டுள்ளது.
இந்த நிலைமகள் தமிழ் மக்கள் மனங்களில் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போன்றும், தொடர்ந்தும் அவர்களை துன்ப நிலைக்குள் வைத்திருக்கக் கூடிய விதத்திலும், எமது மக்களின் உரிமையோடு விளையாடுகின்ற செயற்பாடாகவுமே இது அமைந்திருக்கின்றது.
தமிழர்களின் உயிர், உரிமை பறிக்கப்பட்டிருக்கின்றது, உடலங்கள் தொலைக்கப்பட்டும், அழிக்கப்பட்டும் இருக்கின்றது. இன்று எமது மக்களின் உணர்வுகளோடு விளையாடுகின்ற செயற்பாடு நடைபெறுகின்றது.
ஒரு ஜனநாயக நாட்டில் மறைந்த, கொல்லப்பட்டவர்களை நினைவு கூருவதற்கான உரிமை இருக்கின்றது. மக்கள் விடுதலை முன்னணியினர் அவர்களது போராளிகளை நினைவு கூருகின்றார்கள், நினைவுத்தூபிகளையும் தென்பகுதிப் பல்கலைக் கழகங்களில் அமைத்திருக்கின்றார்கள். அவ்வாறிருக்கும் போது எமது வடக்கு கிழக்கு பகுதிகளில் நினைவகங்கள் உடைக்கப்பட்டிருக்கின்றமை மிகவும் வேதனையான ஒரு விடயம். நாங்கள்  இதனை மிகவேதனையோடு கண்டிக்கின்றோம். இத்தகைய செயற்பாடுகள் மூலம் எம்மை அடக்க, ஒடுக்க, முடக்க நினைப்பது எடுபடாது என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம் என்று தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.