அனுமதிப்பத்திரம் பெற்று அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகிக்க அனுமதி!

மொத்த விற்பனையாளர்கள், புறக்கோட்டை மொத்த வர்த்தக சந்தையில் அவசியமான நுகர்வுப் பொருட்களைக் கொள்வனவு செய்ய இன்று (16) முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதற்கமைய, மொத்த விற்பனையாளர்கள், தங்களது பிரதேச செயலகத்தில் அனுமதிப்பத்திரம் பெற்று, மொத்த கொள்வனவுக்காக மாத்திரம், புறக்கோட்டை மொத்த வர்த்தக சந்தைக்கு பிரவேசிக்க முடியும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மக்களுக்கு ஏற்படும் அசௌகரியத்தை தவிர்ப்பதற்காக, அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களை நாடுமுழுவதும் விநியோகிப்பதற்கான நடவடிக்கை திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, நடமாட்டத்தடை விதிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில், பிரதேச ரீதியாக மரக்கறிகள் மற்றும் பழங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்பது அவசியமாயின், பிரதேச செயலாளர் அல்லது கிராம சேவகர் ஊடாக அனுமதியை பெற்று, அவற்றை விநியோகிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான ஆலோசனைகள், பிரதேச செயலாளர்களுக்கும், கிராம சேவகர்களுக்கும் கடந்த 10 ஆம் திகதி வழங்கப்பட்டுள்ளதாக பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணி அறிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.