சம்மாந்துறை விவசாயியால் நெல் விதையிடு கருவி மற்றும் களையகற்றும் இயந்திரம் ஆகியவை கண்டுபிடிப்பு

[ஐ.எல்.எம் நாஸிம் ]

மனித சமூகத்தின் இருப்பிற்கு உணவு இன்றியமையாததாகும் அதற்கு விவசாய உற்பத்திகளே பெரும் பங்கினை வழங்கி வருகின்றன.

வரலாற்றில் வேளாண்மையின் வளர்ச்சியும் முன்னேற்றமும் வெவ்வேறு காலநிலைகள், பண்பாடுகள், தொழில்நுட்பங்கள் போன்றவற்றைச் சார்ந்து மாறுபட்டும் இருந்துள்ளது.

இருந்தும் தற்காலத்தில் களைநெல்லை கட்டுப்படுத்துவது விவசாயிகளுக்கும் விவசாயத்திற்கும் பாரிய சவாலாக காணப்படுகின்றது.

ஏனைய களைகளுக்கு இரசாயனம் உண்டு ஆனால் நெற்செய்கையில் 100% விளைச்சல் இழப்பை ஏற்படுத்தும் களைநெல்லுக்கு இரசாயனம் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

அந்த வகையில் சம்மாந்துறை பிரதேச நெற்சைய்கை விவசாயிகளுக்கு மட்டுமல்லாமல் நாடு பூராகவும் களைநெல் பாரிய சவாலாக காணப்படுகின்றது.

இதனை தடுக்கும் முகமாகவும் நெற்செய்கையில் புதுமையையும் வளர்ச்சியையும் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்துடனும் சம்மாந்துறை-மல்வத்தை விவசாய விரிவாக்கல் காரியாலயத்திட்குட்பட்ட விவசாயி ஐ.எல்.எம் ஜெமீல் என்பவர் நெல் விதையிடு கருவி (Drum seeder) ஒன்றையும் அதற்கான களையகற்றும் இயந்திரம் (Power Weeder) ஒன்றினையும் அப்பகுதி விவசாயப்போதனாசிரியர்களின் ஒத்துழைப்புடன் கண்டுபிடித்து விவசாயத்துறையில் பாரிய பாய்ச்சலை நிகழ்த்தியுள்ளார்.

இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ள களையகற்றும் இயந்திரம் ஆனது பயன்பாட்டிலுள்ள ஏனைய களையகற்றும் இயந்திரங்களை விட வித்தியாசமானதும், சக்தி கூடியதும் இலகுவாக கையாளக்கூடியதுமாக காணப்படுகிறது.

வழமையான களையகற்றும் இயந்திரமானது இரண்டு அடிப்பு, மற்றும் இரண்டு வரிசைகளுடையதாக இருக்கின்றது. இருப்பினும் சம்மாந்துறை விவசாயி கண்டுபிடிப்பிடித்துள்ள இயந்திரம் நான்கு அடிப்புக்கள் உடையதும் நான்கு வரிசைகள் கொண்டதுமாக காணப்படுகின்றது.

ஏற்கனவே விவசாய திணைக்களத்தினால் நெல் விதையிடு கருவியாக அறிமுகப்படுத்தப்பட்ட இயந்திரம் 8 வரிசைகளை இடக்கூடிய இயந்திரமாகும். ஆனால் இந்த விவசாயி ஒரே தடவையில் 12 வரிசையில் நெல் இடக்கூடியவாறு விதையிடு இயந்திரத்தை கண்டுபிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ள இவ்வியந்திரங்களை அம்பாறை மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளரும் பீடை கொல்லி கட்டுப்பாட்டு சட்டத்தின் அதிகாரமளிக்கப்பட்ட உத்தியோகத்தருமான எம்.எப்.எ ஸனீர், விவசாய இயந்திர பாடவிதான உத்தியோகத்தர் எஸ்.தவனேசன் மற்றும் சம்மாந்துறை மல்வத்தை விவசாய விரிவாக்கல் நிலையங்களுக்கான நிலைய பொறுப்பதிகாரி எம்.டி.எ கரீம் தலைமையிலான விவசாய போதானசிரியர் குழு நேரில் சென்று தொழிற்பாட்டை ஆராய்ந்தது.

மேலும் எதிர்காலத்தில் விவசாய திணைக்கள பண்ணை இயந்திரங்கள் ஆராய்ச்சி நிலையத்திற்கு அனுப்பப்பட்டு பரீட்சிக்கப்பட்ட பின் அத்தாட்சிப்படுத்தப்பட்டு உரிய விவசாயிக்கு ஆக்கவுரிமை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அம்பாறை மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளரும் பீடை கொல்லி கட்டுப்பாட்டு சட்டத்தின் அதிகாரமளிக்கப்பட்ட உத்தியோகத்தருமான எம்.எப்.எ ஸனீர் தெரிவித்தார்.

இது தொடர்பாக விவசாயி ஐ.எல்.எம் ஜெமீல் கருத்து தெரிவிக்கையில்;

களை நாசினிகள், கிருமி நாசிகளை தவித்துக் கொள்வதற்காகவே நான் இவற்றை கண்டுபிடித்துள்ளேன். இதை அனைவரும் எடுத்து செயற்படுத்தினால் நெற்பயிர்ச் செய்கையின்போது களை இல்லாமல் ஆக்கலாம், கிருமி நாசினிகள் தெளிப்பதை குறைக்கலாம், விதை நெல்லை 50% குறைக்கலாம், உற்பத்தி செலவையும் குறைக்கலாம் ‘ என நம்பிக்கை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர் வரும் காலங்களில் இயந்திரம் மூலமாகவே நெல் விதையிடு கருவியை பயன்படுத்தி ஒரு நாளைக்கு சுமார் 3ஏக்கர் ,4 ஏக்கர் விதையிடும் கருவியை உருவாக்கவுள்ளதாகவும், அதுவே என்னுடைய கனவு என்றும் தெரிவித்தார்.

அத்துடன் விவசாய திணைக்களம் கூறுவதை போன்று என்னால் வடிவமைக்க முடியும். இந்த நாட்டு பிரஜை என்ற ரீதியில் நாட்டுக்காகவும் விவசாயிகளுக்காகவும் எனது கண்டுபிடிப்புக்களை மேற்கொள்கிறேன்.எனவும் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.