வெறுமனே தேர்தல் கூட்டுக்கு உடன்பட தமிழ் மக்கள் தேசிய கூட்டணி தயாரில்லை

வெறுமனே தேர்தல் கூட்டுக்கு உடன்பட தமிழ் மக்கள் தேசிய கூட்டணி தயாரில்லை என கட்சியின் பேச்சாளரும், கொள்கைப்பரப்பு  செயலாளருமான அருந்தவபாலன் தெரிவித்துள்ளார்

கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் பேச்சுக்களை முன்னெடுக்கும்போது, அரசிடம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சலுகைகளை பெற்றுக்கொள்ளாது தமிழர் உரிமைக்காக பேசுபவர்களையும் அழைத்து சென்று பேசுவதே பலமாக அமையும்

இதன் போது அரசின் சலுகைகளிற்கு இணங்காத தமிழ் தேசிய கட்சிகள் என்ற விடயத்தை இன்றைய ஊடக சந்திப்பில் குறிப்பிட்டிருந்தீர்கள். தற்போது உள்ள அரசின் சலுகைகளிற்கு இணங்காதவர்களா? அல்லது எந்தவொரு காலத்திலும் சலுகைகளிற்கு விலை போகாதவர்களா? எனவும், ஏற்கனவே பல்வேறு சந்தர்ப்பங்களில் நீங்களே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசின் சலுகைகளிற்கு விலை போய்விட்டது என்றவாறான குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தீர்கள். அதனால் மக்கள் தெளிவடைய இந்த கேள்வி அமைகின்றது என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்

அதற்கு பதிலளித்த அருந்தவபாலன், கடந்த காலங்களில் அவ்வாறான விமர்சனங்கள் எழுந்திருந்தது. ஆனால் அதனை அவர்கள் தற்போது உணர்ந்துள்ளனர். இந்த நிலையில் கடந்தவை மறந்து தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்காக பலமான சக்தியாக பேச்சுக்களில் ஈடுபட வேண்டும் என அவர் இதன்போது தெரிவித்தார்.

அண்மையில் தமிழரசு கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா அனைத்து கட்சிகளையும் இணைத்து மாகாண சபை தேர்தலில் போட்டியிட அழைப்பு ஒன்றை விடுத்திருந்தார். அது தொடர்பில் உங்கள் கட்சியின் நிலைப்பாடு என்ன என அவரிடம் ஊடகவியலாளர் வினவினார்.

அதற்கு பதிலளித்த அருந்தவபாலன்,
தேர்தலிற்காக கூட்டு சேர்வதற்கு நாங்கள் தயாரில்லை. உண்மையாக மக்களுக்கு குரல் கொடுக்கவும், மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுப்பது எமது நிலைப்பாடு. அவ்வாறான சந்தர்ப்பங்களில் மாத்திரமே நாங்கள் ஒரு பலம் பொருந்திய சக்தியாக இருப்போம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை குறித்த ஊடகவியலாளர் சந்திப்பின்போது, அரச கரும மொழியான தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும், நாடாளுமன்ற உறு்பபினர்கள் மற்றும் அரச திணைக்களங்களிலும் இவ்வாறு தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு தனி சிங்கள மொழியிலேயே கடிதங்கள் அனுப்பப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.