கொழும்பிலிருந்து மட்டக்களப்பிற்கு வந்த மூன்று சொகுசு பஸ் வண்டிகள் தடுத்துவைப்பு ;பஸ்ஸில் வந்த மூவருக்கு கொரோனா
மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடையை மீறி கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கிவந்த மூன்று சொகுசு பஸ்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளன என மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி டி.எம்.ஏ.சமரகோன் தெரிவித்தார்.
இந்த பஸ் வண்டிகளில் 49 பயணிகள் இருந்தனர் என பொலிஸார் கூறினர். இவர்கள் அன்டிஜன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது மூன்று பேருக்கு கொவிட்- 19 தொற்று உறுதி செய்யப்பட்டது ஏறாவூர்ப் பற்று பிரதேச சுகாதார வைத்தியதிகாரி இ.சிறிநாத் தெரிவித்தார்.
தும்பாலஞ்சோலை இராணுவ முகாம் சோதனைச் சாவடியில் கடமையிலிருந்த இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து இந்த நடவடிக்கையினை இன்று வெள்ளிக்கிழமை (02) அதிகாலை மேற்கொண்டனர்.
இந்த பஸ்கள் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் மட்டக்களப்பிலிருந்து நான்கு மாகாணங்களைக் கடந்து கொழும்பிற்குச் சென்று திரும்பிவரும் வழியில் பாதுகாப்புத் தரப்பினரால் சோதனையிடப்பட்டபோது அவர்களிடம் விசேட அனுமதிப்பத்திரங்கள் மற்றும் பாதை அனுமதியோ இருக்கவில்லையெனத் தெரியவந்துள்ளது.
இந்த பஸ் வண்டிகளின் சாரதிகள் மற்றும் நடாத்துநர்களை நீதவான் முன்னிலையில் ஆஜர்செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கொவிட் தொற்று உறுதிசெய்யப்பட்ட பயணிகள் கரடியனாறு கொவிட் சிகிச்சை நிலையத்தில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த பஸ் வண்டியிலிருந்த ஏனைய பயணிகள் அன்டிஜன் பரிசோதனையினையடுத்து வீட்டிற்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
கருத்துக்களேதுமில்லை