சுவாமி விபுலானந்த அடிகளாரின் 74 ஆவது சிரார்த்த தினம் மட்டக்களப்பில் அனுஸ்டிப்பு!

சுவாமி விபுலானந்த அடிகளாரின் 74 ஆவது சிரார்த்த தின நிகழ்வுகள் இன்று (19) மட்டக்களப்பில் பல்வேறு  இடங்களில் அனுஸ்டிக்கப்பட்டது.
அதனடிப்படையில்  கல்லடி – உப்போடை மணிமண்டப வளாகத்தில் அமைந்துள்ள சுவாமி விபுலானந்தரின் சமாதியில் சிவானந்தா வித்தியாலய அதிபர் ந.சந்திரகுமாரின் ஒழுங்கமைப்பில் அனுஷ்டிக்கப்பட்டது.
இந் நிகழ்வில் மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் மேலாளர்  சுவாமி தட்சயானந்தா ஜீ மஹராச், சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு விழாச்சபை தலைவர் க.பாஸ்கரன், செயலாளர் ச.ஜெயராஜா மற்றும் சிவானந்தா வித்தியாலய ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.
அடிகளாரது சமாதிக்கு மலர் மாலை அணிவித்து, மலரஞ்சலி செலுத்தப்பட்டதனைத் தொடர்ந்து பாடல் பாடி ஜனனதின நிகழ்வுகள் சுகாதார முறைப்படி அனுஷ்டிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு திருநீற்றுப் பூங்காவில் அமைந்துள்ள சுவாமியின் திருவுருவச் சிலைக்கு மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் மன்றத்தின் தலைவர் மு.பவளகாந்தனின் தலைமையில் மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டதனைத் தொடர்ந்து வின்சன்ட் மகளீர் தேசிய பாடசாலையின் மாணவிகளால் சுவாமி விபுலானந்தரின் ”வெள்ளை நிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ” எனும் பாடலும் இசைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வீ.வாசுதேவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.
அத்தோடு சுவாமியின் சிரார்த்த தின நிகழ்வுகள் கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவ வளாகத்திலும் இடம்பெற்றிருந்தது.
இதன்போது சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவ வளாகத்தில் அமையப்பெற்றுள்ள
சுவாமியின் திருவுருவச்சிலைக்கு
நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி திருமதி.பாரதி கெனடி தலைமையில்
மலர்மாலை அணிவிக்கப்பட்டதுடன், சூம் (zoom) தொழில்நுட்பத்தின் ஊடாக நினைவுப்பேருரை நிகழ்வொன்றும்  இடம்பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.