ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலும் சினோபாம் தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கை ஆரம்பம்

[வி.சுகிர்தகுமார்]

 

 

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட 26 சிகிச்சை நிலையங்கள் மற்றும் 17 வைத்தியசாலைகளில் இன்று தடுப்பூசிகள் ஏற்றப்படும் நடவடிக்கை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜி.சுகுணன் மேற்பார்வையில் இடம்பெற்று வருகின்றது.
இதற்கமைவாக ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலும் இன்று(24) முதல் சினோபாம் தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி திருமதி எஸ்.அகிலன் மேற்பார்வையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
50 ஆயிரம் தடுப்பூசிகள் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட பிரிவுகளுக்கு வழங்கப்பட்ட நிலையில் ஆலையடிவேம்பிற்கு 2500 தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளதுடன்  சனி ஞாயிறு மற்றும் திங்கள் (24,25,26) ஆகிய மூன்று தினங்களில் மாத்திரம் தடுப்பூசி ஏற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கை அக்கரைப்பற்று இராமகிருஸ்ண தேசிய பாடசாலை மற்றும் கோளாவில் விநாயகர் மகாவித்தியாலயம் ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை ஆகிய மூன்று நிலையங்களிலும் இடம்பெற்று வருகின்றது.
இதில் ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் 12 வாரங்களை கடந்த கர்ப்பிணி தாய்மார்களுக்கு தடுப்பூசிகள் ஏற்றப்படுவதுடன் ஏனைய இரு நிலையங்களில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட அரச உத்தியோகத்தர்களை முன்னிலைப்படுத்தி பின்னராக 30 வயதை கடந்தவர்களுக்கும் தடுப்பூசிகள் ஏற்றப்படுகின்றது.
இன்று ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன் உள்ளிட்ட அரச உயர் அதிகாரிகளும் அரச உத்தியோகத்தர்கள் மற்றும் ஆசிரியர்களும் தடுப்பூசியினை ஏற்றி கொண்டனர். மேலும்
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட பிரதேசங்களுக்கு முதற்தடவையாக தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் ஆலையடிவேம்பு பிரதேசத்திற்கு கிடைத்துள்ள 2500 தடுப்பூசிகளை மக்கள் முறையாக பயன்படுத்தி கொள்வதுடன் நேரகாலத்திற்கு வருகை தந்து தடுப்பூசிகளை ஏற்றி கொண்டு சுகாதாரத்துறையினருக்கு ஒத்துழைப்பை வழங்குமாறும் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி திருமதி எஸ்.அகிலன்; கோரிக்கை விடுத்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.