நாட்டின் பெரும் சொத்து எம்மை விட்டு பிரிந்தது!

திரு. R. ராஜமகேந்திரன் அவர்களுக்கு இதய அஞ்சலிகள்.

கப்பிட்டல் மஹாராஜா குழுமத்தின் தலைவர் திரு. R. ராஜமகேந்திரன் அவர்கள் காலமானார் என்ற செய்தி பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையின் புகழ்பூத்த தொழில்துறை குழுமத்தினை 1983ம் ஆண்டில் பொறுப்பேற்று பல்வேறுபட்ட இடர்காலங்களுக்கு மத்தியிலும் மிகச்சிறப்பாக கட்டியமைத்து நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெரும் பங்காற்றியவராக அவர் இந்நாட்டின் கௌரவத்துக்குரியவர்.

யாழ்ப்பாணத்தை சொந்த இடமாக கொண்டு வளர்ந்து வாழ்ந்த அவர், இம் மண்ணில் ஏற்பட்ட யுத்தகாலச் சூழல்களிலும், அதன் பின்னதான மீள்கட்டமைப்பு செயற்பாடுகளிலும் அதிக அக்கறை காட்டியதோடு, தனது மண்ணிலும், மலையக மண்ணிலும், நாட்டின் அனைத்துப்பாகத்திலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நல்வாழ்வை வழங்க, பொருளுதவிகளும், தார்மீக உதவிகளையும் வழங்கியிருந்ததை இந்நாட்டு மக்கள் என்றும் நினைவில் வைத்திருப்பார்கள்.

சுனாமி, இயற்கை அனர்த்தங்கள் உள்ளிட்ட பேரிடர்கள் இத்தேசத்தை உலுக்கியபோதெல்லாம் நாட்டையும் மக்களையும் கைகொடுத்து தூக்கி அரவணைத்த பெருமனிதர் திரு. R. ராஜமகேந்திரன் அவர்கள்.

நாட்டின் எப்பாகத்திலும் உள்ள திறமையாளர்களை இனங்கண்டு அவர்களுக்கான அனுசரணையாளராக நின்று, அவர்களை வளர்த்தெடுத்து அடையாளம் பெறும் மனிதர்களாக மாற்றியிருந்தார்.

ஜனநாயகத்தின் தூண்களில் ஒன்றான ஊடகத்துறையை வளர்த்தெடுக்கும் விதமாக, “சிரச, சக்தி” தனியார் ஊடகத்துறையை ஆரம்பித்து அதனூடாக மக்கள் சார்ந்தும், மக்களுக்கு சேரவேண்டிய செய்திகளை கொண்டு சேர்ப்பதில் பெரும் அக்கறையோடு பணியாற்றியிருந்தார்.

நாட்டின் அரசியல் சார்ந்து அதீத அவதானிப்பை கொண்டிருந்த திரு. R. ராஜமகேந்திரன் அவர்கள், நான் உட்பட அனைத்து மக்கள் பிரதிநிதிகளுடனும் இத்தேச மக்களின் நல்வாழ்வுக்கான ஆரோக்கியான கலந்துரையாடல்களை செய்வதை தன்கடமைகளில் ஒன்றாக கடைப்பிடித்தார்.

இந்நாட்டின் இளைஞர்களுக்கும், தொழில்துறைகளில் சாதிக்க நினைப்போருக்கும் ஒரு பிதாமகராக நின்ற ஆதர்ச மனிதராக திரு. R. ராஜமகேந்திரன் அவர்கள் திகழ்ந்திருந்தார்.

அன்னாரின் மறைவு இந்நாட்டுக்கு பேரிழப்பாகும். அவரின் குடும்பத்தினருக்கும், அவரது நிறுவனப் பணியாளர்களுக்கும், அவரது நலன்விரும்பிகள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்வதோடு, அன்னாரின்ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போமாக…

அவரது பணிகள், அவர் சாதிக்க நினைத்தவைகள் அவர்சார்ந்தோரால் தொடரப்பட வேண்டும்,
அவை திரு. R. ராஜமகேந்திரன் அவர்களின் பெயரை நிலைபெறச் செய்ய வேண்டும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.