சாக்கடைகளின் பேச்சும் சாக்கடைகளுக்கே உரித்தாகும் – கிண்ணியா நகர சபை உறுப்பினர் எம். எம்.மஹ்தி…
புதிய ஜனநாயக மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளரான நடராஜா ரவிக்குமார் போன்ற சாக்கடைகளின் பேச்சுக்களும் கருத்துக்களும் சாக்கடைகளுக்கே சொந்தமாகுமென கிண்ணியா நகர சபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மூதூர் தொகுதிக்கான கொள்கை பரப்புச் செயலாளருமான எம் எம் மஹ்தி தெரிவித்துள்ளார்.
இன்று(17) செவ்வாய்கிழமை ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவ்வறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளதாவது
புதிய ஜனநாயக மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர் என கூறிக் கொள்ளும் நடராஜா ரவிகுமார் என்பவர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும் முன்னாள் அமைச்சருமாகிய கௌரவ ரிஷாட் பதியுதீன் அவர்களின் மீதும், இஸ்லாமிய பெண்கள், இஸ்லாமிய பெண்களின் ஆடைகள் மீதும் மிகவும் கீழ்த்தரமாக உண்மைக்குப் புறம்பான, எந்தவொரு அடிப்படையுமில்லாத தகவல்களை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இலங்கை வரலாற்றிலே பணத்திற்காகவும் பதவிக்காகவும் சோரம் போகின்ற இவரைப் போன்ற கைக்கூலிகளால் இதே போன்று இதற்கு முன்னரும் பல தடவைகளில் இவ்வாறான நாடகங்கள் அரங்கேற்றப்பட்டிருக்கின்றன.
ஆனாலும் இவ்வாறான சாக்கடைகளால் தெரிவிக்கப்படுகின்ற கருத்துக்களை சாமானிய இந்துக்களோ பௌத்த மக்களோ ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.
அவரால் ஊடகங்களில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களில் இருந்து அவரது பின்புலம், அவர் வளர்ந்த விதம் பற்றியும் எல்லோராலும் இலகுவாக அடையாளங் காணக் கூடியதாகவும் உள்ளன.
முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் அவர்கள் மீது சுமத்தப்பட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுக்குஎதிராக பல்வேறு விசாரணைகள் நடைபெற்றன. எதிலுமே அவர் குற்றவாளியாக காணப்படவில்லை.
இஸ்லாமியப் பெண்களையும் அவர்களுடைய ஆடைகளையும், கௌரவ முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்களையும் விமர்சிப்பதன் மூலம் பிரபலமாவதற்கு முயற்சிக்கின்ற இவரைப் போன்ற மட்டமானவர்களை ஒரு போதும் மக்கள் அங்கீகரிக்க மாட்டார்கள்.
இவரால் இட்டுக்கட்டப்பட்டு சொல்லப்பட்ட உண்மைக்குப் புறம்பான அந்த கருத்துக்கள் மத நிந்தனையை செய்யக்கூடியது. இன முரண்பாடுகளையும், விரிசல்களையும் தோற்றுவிக்க கூடியது. அந்த அடிப்படையில் அவருக்கெதிராகவும் அவரது கருத்துகளுக்கு எதிராகவும் உரிய சட்ட நடவடிக்கையை எடுக்க வேண்டும் எனவும் அவரை மன நிலை பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் எனவும் பொலீஸ் மா அதிபர் அவர்களை கேட்டுக் கொள்கிறேன். எனவும் அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை