முல்லை விவசாயிகளுக்கு, சேதனப்பசளை உற்பத்தியை ஊக்குவிப்பது தொடர்பில் விழிப்புணர்வுப் பிரச்சாரம்…
முல்லைத்தீவு மாவட்ட விவசாயிகளுக்கு சேதனப் பசளை உற்பத்தியை ஊக்குவிப்பது தொடர்பிலான விழிப்புணர்வுப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.
இந்த சேதனப் பசளை ஊக்குவிப்புப் பிரச்சாரத்தினை வடமாகாண விவசாயத் திணைக்களம் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட விவசாயத் திணைக்களம் என்பன இணைந்து முன்னெடுத்துள்ளன.
எதிர்வரும் காலபோகத்திற்கு குறிப்பாக நெற்செய்கை, மறுவயல் பயிற்செய்கை, மரக்கறிப் பயிற்செய்கை, பழப்பயிற்செய்கை என்பவற்றிற்கு பெருமளவான சேதனப் பசளையின் தேவை விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
எனவே அந்த சேதனப் பசளையினை உற்பத்திசெய்யும்போது விவசாயிகள் கடைப்பிடிக்கவேண்டிய முறைமைகள் உள்ளிட்ட விடயங்கள் இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தினூடாக விவசாயிகளுக்குத் தெளிவுபடுத்தப்படுகின்றது.
அதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒவ்வொரு பிரதேசங்களுக்கும் விவசாயத் திணைக்கள அதிகரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள், பணியாளர்கள் நேரில்சென்று விவசாயிகளுக்கு சேதனப்பசளை ஊக்குவிப்புத் தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டுவருகின்றனர்.
அந்தவகையில் 17.08.2021 இன்றையதினம் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்றுப் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட உடுப்புக்குளம், அளம்பில், கொக்குத்தொடுவாய், கொக்கிளாய் உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த விவசாயிகளுக்கு சேதனப்பசளை ஊக்குவிப்புத் தொடர்பிலான விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன.
மேலும் இந்த நிகழ்வில் வடமாகாண விவசாயப்பணிப்பாளர் எஸ்.சிவகுமார், பதில் பிரதிமாகணப் பணிப்பாளர் திருமதி.ஜாமினி சசீலன் மற்றும், விவசாயப்போதனாசிரியர்கள், படவிதான உத்தியோகத்தர்கள், விவசாயிகள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை