நாட்டினை முன்னேற்றுவதற்கு இளைஞர்களுக்கும் வாய்ப்பினைப் பங்கீடு செய்யுங்கள் – இளைஞர் பாராளுமன்ற பிரதியமைச்சர் எஸ்.எம்.றிஹான் வேண்டுகோள்.

இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர் என்ற பழமைவாய்ந்த கோட்பாட்டினை மாற்றிவிட்டு, இன்றைய இளைஞர்கள் இன்றைய சமூதாயத்துக்கான தலைவர்கள் என்ற மாற்றத்தைக் கொண்டுவாருங்கள். எமது நாட்டினை முன்னேற்றுவதற்கு இளைஞர்களுக்கும் வாய்ப்பினை பங்கீடு செய்யுங்கள் என இளைஞர் பாராளுமன்ற கப்பல் மற்றும் துறைமுக பிரதியமைச்சர் எஸ்.எம்.றிஹான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது,

இலங்கை வாழ் சமூகத்தினர் காலந்தோறும் ஒவ்வொருவரின் ஆதிக்கத்தின் கீழ் வாழ்ந்து வருகின்றனர். ஆனால், எந்த மாற்றமும் அடையாத நிலையிலேயே காணப்படுகின்றனர்.

பழமை வாய்ந்த கோட்பாடுகள் மூலம் பழைய காலங்களில் பிரயோசனமாக இருந்தன. ஆனால், இன்று புதுமையே புத்துணர்வு என்று உணரும் காலத்திலும் கூட, பழமையையே கடைபிடித்து வருகின்றோம். இதற்கு உதாரணம் இலங்கைப் பாராளுமன்றம். ஏன்? இதை உதாரணமாகக் கொண்டு வந்தேன் என்றால்,தனி மனித மாற்றம்,சமூகத்தின் மாற்றம், ஒரு நாட்டின் மாற்றம் என்ற எடுகோளின் அடிப்படையில் அரசியல்வாதிகள் மாற்றத்தைக் கொண்டுவராத வரைக்கும் சமூகம் ஊதாரியாகவே காணப்படும்.

நாட்டினை முன்னேற்றுவதற்கு இளைஞர்களுக்கும் வாய்ப்பினை பங்கீடு செய்யுங்கள். இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர் என்ற பழமைவாய்ந்த கோட்பாட்டினை மாற்றிவிட்டு, இன்றைய இளைஞர்கள் இன்றைய சமூதாயத்துக்கான தலைவர்கள் என்ற மாற்றத்தைக் கொண்டுவாருங்கள். இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர்கள் 45 வயதிற்கு பின் பாராளுமன்றம் செல்ல முடியாது என்ற சட்டத்தை உருவாக்குங்கள். நாடு எவ்வாறு முன்னேற்றத்தை அடைகின்றது என்று வியப்புடன் பார்க்க முடியும்.

எமது பள்ளிப் பருவத்தில் பல நாடுகளைப் பற்றி அறிந்ததுண்டு. ஆனால், ஏன் அதை செயற்பாட்டு அளவில் யாராலும் கொண்டுவர முடியவில்லை…? காரணம், எம்மில் காணப்படும் கலாசாரம் முதியவர்கள்தான் முன்னேற்றத்தை காண்பிப்பார்கள் என்ற மாயை எமது சமூகத்தில் கோலூன்றிக் காணப்படுகின்றது. அபவிருத்தி அடைந்த நாடுகளை முன்னேற்றியது யார்? சற்று வரலாற்றை தூசு தட்டுங்கள் உங்களுக்கு அது சவுக்கடியாக காணப்படும்.

எந்த அரசியலை எமது நாட்டில் எடுத்துக்கொண்டாலும் அங்கே ஏற்றத் தாழ்வு காணப்படுகின்றது. ஒரு செயற்றிறன் மிக்க, ஓர் ஆளுமை உள்ள, ஒரு மனிதன் என்ற அடிப்படையில் தெரிவு செய்யும் ஒரு சமூகம் எப்போது விமோட்சனம் பெறும் என்ற கேள்வியை உங்கள் மத்தியில் விதைக்கின்றேன்.

‘இது முளைத்தால் மரம் இல்லையேல் அது உரம்’

எமது சமூகத்தின் மாற்றம் கரடி கண்ட கனவு போல் ஆகிவிடக்கூடாது என்ற அவாவோடு உங்கள் முன் ஓர் இளைஞனாய் இதனை முன்வைக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.