வடமாகாணத்தில் மீள குடியேற முடியாத முஸ்லிம்களுக்கு த.தே.கூட்டமைப்பு உதவி செய்ய முன் வர வேண்டும் : ஐக்கிய காங்கிரஸ் கோரிக்கை.
சுமந்திரன் அவர்கள் வெறும் வார்த்தை ஜாலம் காட்டாமல் வட மாகாண முஸ்லிம்களிடம் புலிகள் அபகரித்த காணிகள், சொத்துக்களுக்கு அவர்களுக்கு நஷ்டஈடு பெற்று கொடுக்கவும் இன்னமும் சரியான வசதியின்றி குடியேற முடியாத முஸ்லிம்களுக்கு உதவி செய்ய முன் வர வேண்டும் என ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் கோரிக்கை முன்வைத்துள்ளார். இன்று பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
விடுதலைப்புலிகள் வடமாகாண முஸ்லிம்களை மொத்தமாக வெளியேற்றியமை நிச்சயம் இனச்சுத்திகரிப்பு என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார். அதுமாத்திரமின்றி இது ஒரு துன்பியல் நிகழ்வு என புலிகளும் அந்நாளில் அறிக்கையிட்டு சமாளித்திருந்தார்கள். இப்போது புலிகள் இல்லை, புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ் கூட்டமைப்பு உள்ளது.
புலிகள் விரட்டப்பட்ட வட மாகாண முஸ்லிம்களை ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் அங்கு குடியேற்றினார். ஆனால் அந்த குடியேற்றத்துக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு ஆதரவையாவது வழங்கியதா?
வடமாகாண முஸ்லிம்களின் அனைத்து சொத்துக்களும் கொள்ளையிடப்பட்டதன் பின்னரே வெளியேற்றப்பட்டனர். அவர்கள் மீள் குடியேறும் போது சிலருக்காவது தமிழ் கூட்டமைப்பினர் வீடுகள் கட்டி கொடுத்தனரா? முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்துக்கு உதவாவிட்டாலும் பரவாயில்லை , இன்று வரை தடை போட்டுக்கொண்டிருப்பது தமிழ் கூட்டமைப்பின் இனவாதத்தை காட்டுகிறது. கடந்த பல வருடங்கள் தமிழ் கூட்டமைப்பு வட மாகாணத்தை ஆட்சி செய்தும் வட மாகாண முஸ்லிம்களின் கௌரவமான மீள் குடியேற்றத்துக்கு உதவவில்லை என்றார்.
கருத்துக்களேதுமில்லை