நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் மாம்பழ திருவிழா.

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவ திருவிழாவின் 22ஆம் திருவிழாவான இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) மாம்பழ திருவிழா சிறப்பாக நடைபெற்றுள்ளது.

இன்று காலை 6.45 மணியளவில் நடைபெற்ற வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து பிள்ளையாரும் முருகபெருமானும் உள்வீதியுலா வந்து சிறப்பாக மாம்பழ திருவிழா நடைபெற்றுள்ளது.

நாரதர் சிவபெருமானுக்கும்  உமாதேவியாருக்கும் ஒரு மாம்பழத்தை கொடுத்தார். அதனை யாருக்கு கொடுப்பது என தீர்மானிப்பதற்கு, முதலில் உலகை சுற்றி வருபவருக்கே இந்த மாம்பழத்தை தருவோம் என சிவபெருமானும் உமாதேவியாரும் பிள்ளையாருக்கும் முருகனுக்கும் கூறினார்கள்.

இதன்போது முருகபெருமான், உடனே மயில் மீதேறி உலகை சுற்றி வர சென்றபோது, பிள்ளையார் சிவபெருமானையும் உமாதேவியாரையும் சுற்றி வந்து, நீங்களே என் உலகம் என கூறி மாம்பழத்தை பெற்றுக்கொண்டார்.

உலகை சுற்றி வந்த முருகனுக்கு மாம்பழம் கிடைக்காததால் தனது நகை, உடை அனைத்தையும் துறந்து பழனி மலையில் போய் அமர்ந்தார் என புராண கதையை மையமாக வைத்தே இந்த திருவிழா இடம்பெற்று வருகின்றது.

இதேவேளை நல்லூர் மகோற்சவ திருவிழாவின் சப்பர திருவிழா, நாளை (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கும் தேர்த்திருவிழா நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணிக்கும் மறுநாள் திங்கட்கிழமை காலை தீர்த்த திருவிழாவும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.