நீதியை பெற்றுக் கொடுக்க முஸ்லிம் தலைமைகள் தவறுகின்றார்களா?

அண்மைய காலங்களாக எந்த ஒரு அடிப்படையும் இன்றி அரசியல் காரணங்களுக்காக திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட கலவரங்களால் அநியாயமாக பாதிக்கப்பட்டு தமது சொத்துக்களையும், பொருளாதாரத்தையும், உயிர்களையும் இழந்தவர்களுக்கு உரிய நீதியை பெற்றுக் கொடுக்க முஸ்லீம் தலைவர்கள் ஏன் நடவடிக்கை எடுக்க வில்லை என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மூதூர் தொகுதிக்கான கொள்கை பரப்புச் செயலாளரும் கிண்ணியா நகர சபை உறுப்பினருமான எம். எம். மஹ்தி கேள்வி எழுப்பியுள்ளார்.ஊடகங்களுக்கு இன்று (10)வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்தும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது
இலங்கை வரலாற்றில் காலம் காலமாக பல்வேறு திட்டமிட்ட அழிவுகளுக்கு அநியாயமாக முகம் கொடுத்து வருகின்ற முஸ்லிம் சமூகம் தமது பொருளாதாரத்தை, உயிர்களை, சொத்துக்களை இழந்து கொண்டே வருகின்றார்கள்.
அவ்வாறான இழப்புகளுக்கு முகம் கொடுப்பவர்களுக்கு அவர்களது வாக்குகளால் தெரிவு செய்யப்படுகின்ற அரசியல் தலைமைகள், பாராளுமன்ற பிரதி நிதிகள் நியாயமான நீதியையும் இழப்பீடுகளையும் பெற்றுக் கொடுக்க தவறி வருகின்றனர்.
அந்த அடிப்படையில் அண்மை காலங்களில் அம்பாறை கருத்தடை கொத்து, கண்டி- திகன பிரச்சினை, ஈஸ்டர் தாக்குதலை தொடர்ந்து அரங்கேற்றப்பட்ட பேரழிவுகள், வைத்தியர் சாபியினது சம்பவம் போன்றவற்றில் திட்டமிட்ட அடிப்படையில் முஸ்லீம்களுக்கு எதிராக அநியாயக் கலவரங்களை வன்முறையாளர்கள் அரங்கேற்றினர்.
அக் கலவரங்களால் பாதிக்கப்பட்ட முஸ்லீம் சமூகத்திற்குக்கு உரிய நீதியையும் அவற்றுக்கான இழப்பீடுகளையும் பெற்றுக்கொடுக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்  அது முடியாத போது ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் கவனத்திற்கேனும் கொண்டு செல்ல வேண்டும் எனவும் கட்சித் தலைவர்களையும் அரசோடு இணக்க அரசியலை செய்து வருகின்ற பாராளுமன்ற பிரதிநிதிகளையும் கேட்டுக்கொள்கின்றேன்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.