ஞானசார தேரருக்கு எதிராக முஸ்லிம் எம்.பிக்கள் முறைப்பாடு

முஸ்லிங்கள் மீது அவதூறு பரப்பும் விதமாகவும் இறைவனை நிந்திக்கும் விதமாகவும் சிங்கள தனியார் ஊடகமொன்றின் அரசியல் விவாத நிகழ்ச்சியில் கருத்து தெரிவித்த பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், பைசல் காசிம், அல்ஹாபிழ் இசட். நஸீர் அஹமட், எம்.எஸ். தௌபீக், அலிசப்ரி ரஹீம், சட்டத்தரணி முஸாரப் முதுநபின், இசாக் ரஹ்மான் ஆகியோர் பொலிஸ் தலைமையகம் மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவு பணிப்பாளர் ஆகியோரிடம் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார்கள்.
ஞானசார அண்மையில் சிங்கள ஊடகத்திற்கு கருத்து தெரிவிக்கையில் கடந்த ஈஸ்டர் குண்டு தாக்குதல் நடத்திய குழு மற்றும் அவர்களை அந் நடவடிக்கையில் ஈடுபட தூண்டிய விடயம் சில குர்ஆனின் போதனைகளாக இருப்பதுடன் அவர்கள் வணங்கும் இறைவனான அல்லாஹ்தான் இதற்கு முழுக்காரணம் என்று இறைவனை நிந்திக்கும் விடயம் பாரதூரமானது இதனால் முஸ்லிம்கள் கொதிப்படைந்துள்ளனர்.
எனவே இந்த விடயத்தை செய்த ஞானசார தேரருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நோக்கில் குறிப்பாக மக்களை குழப்பி மத நிந்தனை செய்துள்ள இந்த குற்றச் செயலுக்கு ICCPR சட்டத்தின்கீழ் ஞானசாரவை கைது செய்து தண்டிக்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர்கள் பொலிஸ்மா அதிபர் மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்திடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
இது விடயம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது கடந்த காலங்களில் ஞானசார தேரர் சமூகத்திற்கு எதிராக செயற்பட்டதற்கு அமைய சட்ட ரீதியாக அணுகி அவர் தண்டிக்கப்பட்டார். அதேபோன்று இவ்விடயம் சம்பந்தமாக தாங்கள் நாட்டின் முக்கிய உலமாக்கள் சட்டத்துறை விற்பன்னர்கள் சமூக நல வாதிகள் ஆகியோருடன் கலந்துரையாடினோம். அவர்கள் கூறிய ஆலோசனை இது சம்பந்தமாக பாராளுமன்றத்தில் கடுமையான முறையில் விவாதிக்கும்போது  ஞானசாரருக்கு சார்பாக  சிங்களப் பாராளுமன்ற உறுப்பினர்கள் இதை பாரிய சிங்கள முஸ்லிம் குழப்பத்திற்கு கொண்டுபோக முடியும். எனவே இவ்வாறான சூழ்நிலையை விட இறைவனுக்கு செய்த நிந்தனையையும் முஸ்லிம் மக்களுக்கு அச்சுறுத்தலாக செயற்படும் இந்த ஞானசாரவை சட்டத்திற்கு முன் நிறுத்தி தண்டனை வழங்க நடவடிக்கை எடுப்பது நல்லது என்று ஆலோசனை வழங்கியுள்ளனர்.
அந்த அடிப்படையிலேயே மிக நிதானமாகவும் சமூக பொறுப்புடனும் இவருக்கு நடவடிக்கை எடுக்க பொலீசாரை அனுகியுள்ளோம்.
இது விடயமாக மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவை சந்தித்து பேசியுள்ளதுடன் இவருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அதற்கான துரித நடவடிக்கை எடுக்க பொலிசாரை பணிக்கு மாறும் கோரிக்கை விடுத்துள்ளோம். மேலும் நாடு திரும்பியவுடன் ஜனாதிபதியை சந்தித்து ஞானசார தேரர் இந்த நாட்டில் சமூகங்களிடையே பெரும் குழப்பத்தை உருவாக்க முயற்சிப்பதை சுட்டிக்காட்டி ஞானசாரருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்துவதற்கும் தீர்மானித்துள்ளோம்.
குறிப்பாக முஸ்லிம் சமூகம் சம்பந்தமாகவும் முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக யார் செயல்ப்பட்டாலும் எதற்கும் அஞ்சாது இதயசுத்தியுடன் சமூகம் பாதுகாப்பாக அச்சமின்றி வாழக்கூடிய சூழலை இந்நாட்டில் உருவாக்க முயற்சிப்போம் என்பதை எமது சமூகம் உணர்ந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.