விமர்சிக்கும் யாருக்கும் அஞ்சப்போவதில்லை : விரைவில் எமது திட்டங்கள் வெற்றிகரமாக நிறைவேறும் .

விமர்சிக்கும் யாருக்கும் அஞ்சப்போவதில்லை : விரைவில் எமது திட்டங்கள் வெற்றிகரமாக நிறைவேறும் –  சாய்ந்தமருது கூட்டுறவு சங்கத்தலைவர் உதுமாலெப்பை !

சாய்ந்தமருது பல்நோக்கு கூட்டுறவு சங்கம் தன்னுடைய 50 வது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு எதிர்வரும் 28 ஆம் திகதி புதிய விற்பனை நிலையமொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக சாய்ந்தமருது பல்நோக்கு கூட்டுறவு சங்க நிர்வாகத்தலைவர் எம்.எம். உதுமாலெப்பை தெரிவித்தார்.

இன்று (24) காலை சாய்ந்தமருது பல்நோக்கு கூட்டுறவு சங்க அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 2016 ஆகஸ்டில் புதிய நிர்வாகம் இந்த மட்டுப்படுத்தப்பட்ட சாய்ந்தமருது பல நோக்கு கூட்டுறவு சங்கத்தை பொறுப்பேற்ற போது மிகவும் வறுமையான சங்கத்தை போன்று குடிநீர், மின்சாரம், தொலைபேசி வசதிகள், போதிய வசதிகளில்லாத கட்டிடம் போன்ற எவ்வித அடிப்படை வசதிகளுமில்லாமல் இருந்தது. இதனை கவனத்தில் எடுத்து உடனடியாக அந்த வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தோம்.

நிர்வாக முன்னெடுப்புக்களை சிறப்பாக செய்ய முன்னாள் அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவருமான றிசாத் பதியுதீன் முன்னாள், அரச வர்த்தக கூட்டுத்தாபன தலைவராக இருந்த கலாநிதி ஏ.எம். ஜெமீல், கடந்த நல்லாட்சி காலப்பகுதியில் ஐ. தே. கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த மாரசிங்க ஆகியோர் சங்கத்தின் மேம்பாட்டுக்காக உதவினார்கள். நாட்டில் ஒரு அசாதாரண நிலை ஏற்படும் போது முன்னின்று மக்கள் பணி செய்வதிலும் மட்டுப்படுத்தப்பட்ட சாய்ந்தமருது பல நோக்கு கூட்டுறவு சங்கம் எப்போதும் பின்நின்றதில்லை. இந்த நிர்வாகத்தினரால் கூட அண்மையில் நாட்டில் ஏற்பட்ட கொரோனா அலையின் தாக்கத்தினால் பயணத்தடை அமுலான போது பாதிக்கப்பட்ட வசதி குறைந்த மக்களுக்கு நிவாரண உதவிகள் செய்தமையையும், சாய்ந்தமருதிலிருந்து பல்வேறு சாதனைகள் படைக்கும் சாதனையாளர்களை கௌரவிப்பதிலும் முன்னின்று செயற்பட்டவர்கள் நாங்கள்.  மக்களின் பிரச்சினைகளினதும், தேவைகளினதும் போது நாங்கள் எப்போதும் எதிர்காலத்தை நோக்கி சிந்தித்து செயற்திட்டங்களை முன்வைத்து வருகிறோம்.

சமூக வலைத்தள விமர்சனங்களுக்கும், பதிவுகளுக்கும் பதிலளிப்பதில் எப்போதும் நாங்கள் முன்வரப் போவதில்லை. யாருக்கும் நாங்கள் அஞ்சவும் மாட்டோம். எதிர்வரும் காலங்களில் இந்த சங்கத்தின் வருமானத்தை கூட்ட கோப் டீ நிலையத்தை சாய்ந்தமருது பிரதான வீதியில் அமைக்க திட்டமிட்டுள்ள பணிப்பாளர் சபையினர் எதிர்வரும் 28 ஆம் திகதி கோலாகலமாக திறக்க ஆயத்தமாக உள்ளோம். முன்னாள் பிரதேச செயலாளராக இருந்த இப்போதைய இலங்கை பொதுச்சேவை ஆணைக்குழு உறுப்பினர் ஏ.எல்.எம். சலீம் அவர்களினால் சாய்ந்தமருது கடற்கரை வீதியில் மட்டுப்படுத்தப்பட்ட சாய்ந்தமருது பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் எதிர்கால முன்னேற்றத்திற்காக ஒதுக்கப்பட்ட 25 பேர்ச் காணியில் மீனவர்களின் நன்மை கருதி எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றையும், ஐஸ் தொழிற்சாலையையும் நிறுவ திட்டங்களை தயார்படுத்தி வருவதாகவும் இந்த பணியை வெற்றிகரமாக முன்னெடுக்க சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக் தலைமையிலான சாய்ந்தமருது பிரதேச செயலக அதிகாரிகளும் குறிப்பாக காணி விடயங்களுக்கு பொறுப்பான அதிகாரியும் ஒத்துழைப்புக்களை தொடர்ந்தும் வழங்கி வருவதாக சங்கத்தின் தலைவர் எம்.எம். உதுமாலெப்பை மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.