12.5 கிலோ எரிவாயு சிலிண்டரை 4000 ரூபாவாக அதிகரிக்க முடிவு ?

12.5 கிலோ கிராம் நிறையுடைய லாஃப் எரிவாயு சிலிண்டரின் விலையை 4000 ரூபா வரை அதிகரிப்பதே லாஃப் சமையல் எரிவாயு விநியோக நிறுவனத்தின் நோக்கம் என நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்கும் தேசிய அமைப்பின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்தார்.

நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்கும் தேசிய அமைப்பின் அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

தற்போது நாட்டில் லாஃப் ரக சமையல் சிலிண்டரை பெற்றுக் கொள்வதில் நுகர்வோர் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றனர். இன்னொருபுறம் ஒருசில பிரதேசங்களில் லிட்ரோ ரக சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தில் தட்டுப்பாடு காணப்படுகிறது.எனினும் லிட்ரோ சிலிண்டர் எதிர்வரும் வாரம் முதல் தட்டுப்பாடின்றி விநியோகிக்கப்படும் என அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

லாஃப் ரக சமையல் எரிவாயுவின் விலை கடந்த காலங்களில் தொடர்ச்சியாக அதிகரிக்கப்பட்டவாறே உள்ளது. மீண்டும் விலையை அதிகரிக்க லாஃப் நிறுவனத்தினர் நுகர்வோர் அதிகார சபையிடம் வலியுறுத்தியுள்ளனர். விற்பனை விலையை கட்டம் கட்டமாக 4000 ரூபா வரை அதிகரிக்க லாஃப் நிறுவனத்தினர் திட்டமிட்டுள்ளனர்.

அரசாங்கத்தின் அனுமதி இல்லாமல் சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்கும் நிலை தற்போது காணப்படுகிறது.

அதன் காரணமாகவே லாஃப் நிறுவனம் சிலிண்டர் விநியோகத்தை தற்போது மட்டுப்படுத்தியுள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் தற்போது 8 பிரதான அத்தியாவசியப் பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலை இரத்து செய்யப்பட்டுள்ளது. அத்தியாசிய பொருட்களின் விலை நியாயமற்ற வகையில் அதகரிக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்க்கட்சியும் பொறுப்பு கூற வேண்டும். ஏனெனில் நாட்டில் தற்போது பலமான எதிர்க்கட்சியொன்று இல்லை.

அரிசி இல்லாவிடின் மரவள்ளிக் கிழங்கை அவித்து உண்ணுங்கள் என அமைச்சர் சமல் ராஜபக்ஷ கூறியுள்ளமை மக்கள் மீது அவர்கள் கொண்டுள்ள அக்கறையை வெளிப்படுத்தியுள்ளது.

சமையல் எரிவாயு பிரச்சினை காரணமாக கொழும்பில் உள்ளவர்களுக்கு மரவள்ளிக் கிழங்கை கூட அவித்து உண்ண முடியாத நிலை விரைவில் ஏற்படும் என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.