ஜேர்மனிய தூதுவருடன் கூட்டமைப்பினர் சந்திப்பு…

ஜேர்மனிய தூதுவர் ஹோல்கர் ஸுபேர்ட், உதவி தூதுவர் ஓலாப் மல்ஷோ ஆகியோருடனான அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு ஒன்றை கூட்டமைப்பினர் மேற்கொண்டிருந்தனர்.  24 நவம்பர் 2021 புதன்கிழமை காலை பத்தரை மணிக்கு கொழும்பில் உயர்ஸ்தானிகத்தில் உத்தியோகபூர்வ இச்சந்திப்பு நடைபெற்றது.
இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம், மற்றும் ரெலோவின் ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
  தற்போதுள் அரசியல் சூழ்நிலைகள்,  ஐநா 46/1 பிரேரணை,  பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப் படல், ஜி.எஸ்பி வரிச் சலுகைகள், தமிழ் மக்கள் முகம் கொடுத்திருக்க முக்கிய பிரச்சினையான காணி அபகரிப்பு, இன குடிப்பரம்பல் சிதைப்பு  என்பவற்றை தற்காலிகமாக தடுத்து நிறுத்தும்  முயற்சியாக ஐநா பிரேரணையில் பரிந்துரைக்கப்பட்ட 13வது திருத்தச் சட்டத்தை முற்று முழுதாக நிறைவேற்றுவது, மாகாணசபை தேர்தல்கள்  சம்பந்தமாகவும் கலந்துரையாடப்பட்டது.
தமிழர்கள் ஒருமித்த நிலைப்பாட்டில் சம்பந்தப்பட்ட தரப்புகளை  வலியுறுத்துவது,  அதன் முக்கியத்துவம், அதற்காக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள், அவற்றின் முன்னேற்றம், ஆதரவு தரப்புக்கள், எதிர்கால  நகர்வுகள் என்பன பற்றியும் கூட்டமைப்பு தரப்பால்  விளக்கம் அளிக்கப் பட்டது.
ஐரோப்பிய ஒன்றியத்திலும் ஐரோப்பாவிலும் பிரதானியாகவும், சர்வதேச வல்லரசாகவும், இந்தியாவுடன் நெருங்கிய நட்பு நாடாகவும் விளங்கும் ஜேர்மனியுடனான தமிழ் தரப்பின் மிகவும் அரசியல்  முக்கியத்துவம் வாய்ந்த இச்சந்திப்பு
கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நடைபெற்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.