தென் கிழக்கு பல்கலைக்கழக நூலக ஆவண காப்பகத்திற்கு நவமணி பத்திரிகைகள் கையளிப்பு.

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 25 ஆவது ஆண்டை முன்னிட்டு பல்கலைக்கழக செயற்பாடுகளின் முன்னேற்றகரமான திட்டங்களில் ஒன்றான  நூலக ஆவண காப்பகத்திற்குத் தேவையான ஆவணங்களைத் திரட்டும் வேலைத்திட்டத்திற்கு பத்திரிகைகளை கையளிக்கும் நிகழ்வு (23) செவ்வாய்க்கிழமை நவமணி அலுவலகத்தில் இடம்பெற்றது.
தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் நூலகர் எம்.எம். றிபாய்தீனின் பணிப்புரைக்கமைய,  நூலக காப்பகப் பிரிவுக்குப் பொறுப்பான  சிரேஷ்ட உதவி நூலகர் எஸ்.எல்.எம். சஜீரின் தலைமையில் கொழும்பில் அமைந்துள்ள நவமணி அலுவலகத்திற்கு  விஜயம் செய்து, நவமணிப் பத்திரிகையின் 25 கால வெளியீடுகள் மற்றும் இதர ஆவணங்களையும் பெற்றுக் கொண்டனர்.
இதன்போது நவமணி பத்திரிகையின் முகாமைத்துவப் பணிப்பாளர் எம்.டி.எம். றிஸ்வி, பிரதம ஆசிரியர் என்.எம்.அமீன் மற்றும் தென் கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட உதவி நூலகர் எஸ்.எல்.எம். சஜீர், நூலகக் காப்பாளர் ஐ. அப்துல் ஹலீம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறுபான்மை மக்களின் சமூகக் குரலாக ஓங்கி ஒலித்த ஊடகமான நவமணிப்பத்திரிகை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
சிறுபான்மை சமூகத்தினரின் வரலாற்று ஆவணமாக கருதப்படுகின்ற இப்பத்திரிகை அழிந்து விடாது பாதுகாக்கப்படும் அதேவேளை, இவ் ஆவணத்தினை இளம் மாணவச்  சமூதாயம், ஆராய்ச்சி ஆய்வாளர்கள் பயன்படுத்துவதற்கும் மற்றும் சமூகத்தின் இருப்புக்கு இப்பத்திரிகை ஆவணமாகத் திகழ வேண்டும் என்கின்ற தூர நோக்குடனும் தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் நூலக காப்பகத்திற்கு கையளித்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டின் மூன்று இடங்களில் நவமணிப் பத்திரிகையைப் பார்க்கும் வாய்ப்பினை நவமணி நிருவாகம் ஏற்படுத்தியுள்ளது. தென்கிழக்குப் பல்கலைக்கழக நூலகம், பேருவளை ஜாமிஆ நளீமியா நூலகம், கொழும்பு தமிழ்ச் சங்க நூலகம் என்பனவற்றில் நவமணிப் பத்திரிகையின் 25 வருடகால வெளியீடுகளைப் பார்வையிடலாம்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.