பெரிய நீலாவணை விசேட அதிரடிப்படை முகாம் அமைந்துள்ள காணி விடுவிக்கப்பட வேண்டும்;

பெரிய நீலாவணை விசேட அதிரடிப்படை முகாம் அமைந்துள்ள காணி விடுவிக்கப்பட வேண்டும்;

-கல்முனை மாநகர சபையில் தீர்மானம்

(அஸ்லம் எஸ்.மௌலானா)

பெரிய நீலாவணையில் கல்முனை மாநகர சபைக்கு சொந்தமான இடத்தில் இயங்கி வருகின்ற விசேட அதிரடிப்படை முகாம் அங்கிருந்து அகற்றப்பட்டு, அக்காணி மாநகர சபையிடம் ஒப்படைக்கப்பட வேண்டுமென கல்முனை மாநகர சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கல்முனை மாநகர சபையின் 44ஆவது மாதாந்த பொதுச் சபை அமர்வு நேற்று முன்தினம் (29) பிற்பகல் மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் இடம்பெற்றபோதே இத்தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

இது தொடர்பான பிரேரணையை மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப் அவர்கள் முன்மொழிந்து உரையாற்றுகையில்;

கல்முனை- மட்டக்களப்பு பிரதான வீதியில் துறைநீலாவணைக்கு செல்கின்ற பெரிய நீலாவணை சந்தியின் கிழக்கு புறமாக விசேட அதிரடிப்படை முகாம் இயங்கி வருகின்ற இடமானது மருதமுனை, பாண்டிருப்பு மற்றும் பெரிய நீலாவணை பிரதேசங்களை உள்ளடக்கிய முன்னைய கரைவாகு (கல்முனை) வடக்கு கிராம சபைக் காரியாலயம் இயங்கி வந்த இடமாகும். 1987ஆம் ஆண்டளவில் கல்முனை பட்டின சபையுடன் கரைவாகு வடக்கு கிராம சபையும் இணைக்கப்பட்டே கல்முனை பிரதேச சபை உருவாக்கப்பட்டது. பின்னர் கல்முனை பிரதேச சபையானது நகர சபையாகவும் மாநகர சபையாகவும் தரமுயர்த்தப்பட்டு இன்றளவில் இயங்கி வருகிறது.

இதன்படி குறித்த இடமானது கல்முனை மாநகர சபைக்குரிய சொத்து என்பதனால், அந்த இடத்தை மாநகர சபையின் தேவைக்கு பயன்படுத்தும் நோக்குடன் மீட்க வேண்டியிருக்கிறது. ஆகையினால் அந்த இடத்தில் இயங்கி வருகின்ற விசேட அதிரடிப்படை முகாம் அங்கிருந்து அகற்றப்பட்டு, அதனை வேறொரு இடத்தில் அமைத்துக் கொள்ளுமாறும் எமது மாநகர சபைக்கு உரித்தான அந்தக் காணியை எம்மிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

பிரேரணையை வழிமொழிந்து உரையாற்றிய மாநகர சபை உறுப்பினர் எம்.குபேரன் தெரிவிக்கையில்;

பெரிய நீலாவணையில் விசேட அதிரடிப்படை முகாம் இயங்கி வருகின்ற இடத்திலேயே கரைவாகு வடக்கு கிராம சபைக் காரியாலயம் இயங்கி வந்ததை நாம் அறிவோம். அக்காரியாலயக் கட்டிடம் இப்போதும் இப்படை முகாம் பகுதிக்குள் இருக்கிறது. 1991ஆம் ஆண்டு காலப்பகுதியில் யுத்த சூழ்நிலையின்போது படையினர் இந்த இடத்தை ஆக்கிரமித்து நிலைகொண்டுள்ளனர். இந்த இடம் எமது மாநகர சபைக்கு சொந்தமானது என்பதால் படை முகாமை அங்கிருந்து அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்- என்றார்

மாநகர சபை உறுப்பினர்களான எம்.எஸ்.எம்.உமர் அலி, ஹென்றி மகேந்திரன் ஆகியோரும் கல்முனை மாநகர சபையின் சொத்தாக இருக்கின்ற குறித்த நிலத்தை மீட்பதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து குறித்த பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

அதேவேளை பெரிய நீலாவணையில் கல்முனை மாநகர சபைக்கு சொந்தமான மற்றொரு இடத்தில் அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் நிலையத்தை வேறொரு இடத்திற்கு மாற்றுவது தொடர்பிலும் இதன்போது கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.