ஐரோப்பிய யூனியன் அனுசரணையில் யூ.என்.டி.பி. ஏற்பாட்டில் கல்முனை மாநகர சபையின் வருமான அறவீடுகள் டிஜிட்டல்மயமாகிறது

ஐரோப்பிய யூனியன் அனுசரணையில் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிறுவனத்தினால் (யூ.என்.டி.பி) உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்றிறனை கட்டியெழுப்பும் திட்டத்தின் கீழ் கல்முனை மாநகர சபையின் வருமான அறவீடுகளை டிஜிட்டல் மயப்படுத்தும் முறைமை இன்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்கள் தலைமையில் யூ.என்.டி.பி. நிறுவனத்தின் கிழக்கு மாகாண திட்ட இணைப்பாளர் ஷாமிர் ஷாலிஹ் அவர்களின் ஒருங்கிணைப்பில் இன்று புதன்கிழமை (01) பிற்பகல், முதல்வர் செயலகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.மணிவண்ணன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

அத்துடன் அக்கரைப்பற்று மாநகர முதல்வர் சக்கி அதாஉல்லா, கல்முனை மாநகர பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர், மாநகர ஆணையாளர் எம்.சி.அன்சார், மாநகர சபை உறுப்பினர்களான ஹென்றி மகேந்திரன், எம்.எஸ்.எம்.நிசார், பொன் செல்வநாயகம், கே.சிவலிங்கம், சட்டத்தரணி ரொஷான் அக்தர், எம்.எஸ்.எம்.ஹாரிஸ், எஸ்.சந்திரசேகரம் இராஜன், எம்.ஐ.ஏ.அஸீஸ், ஏ.ஆர்.செலஸ்டினா, நடராசா நந்தினி, யூ.என்.டி.பி. நிறுவனத்தின் நிகழ்ச்சித் திட்ட இணைப்பாளர் ஆர்.சுமித்ரா, மாநகர சபையின் வேலைகள் அத்தியட்சகர் வி.உதயகுமரன், தொழில்நுட்ப உத்தியோகத்தர் எம்.அமீர், உள்ளூராட்சி உத்தியோகத்தர் ஏ.எஸ்.எம்.நௌசாத், தகவல் தொழில்நுட்ப உத்தியோகத்தர் எம்.எச்.ஏ.றியாஸத், உள்ளிட்டோரும் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது குறித்த இலத்திரனியல் செயலியின் நோக்கம், பயன்பாடுகள் மற்றும் அனுகூலங்கள் தொடர்பாக அதன் வடிவமைப்பாளர் காமிஸ் கலீஸ் சமர்ப்பணத் தொகுப்பாக விளக்கமளித்தார்.

அத்துடன் வெளிநாட்டில் இருந்து விசேடமாக கொள்வனவு செய்யப்பட்ட இலத்திரனியல் கருவிகள் மாநகர சபையின் வருமான அறவீட்டாளர்களுக்கு இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.

இதன் மூலம் கல்முனை மாநகர சபையின் அனைத்து வருமான அறவீடுகளும் இலத்திரனியல் முறைமையின் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளன. இதனால் பொது மக்கள் மற்றும் வர்த்தகர்கள் தம்மிடம் வருகின்ற மாநகர சபை வருமான அறவீட்டாளர்களிடம் செலுத்துகின்ற எந்தவொரு வரி மற்றும் கட்டணத்திற்கான பற்றுச்சீட்டை அதே இடத்தில் இலத்திரனியல் கருவி மூலம் பெற்றுக் கொள்ள முடியும் என்பதுடன் அத்தொகை உடனடியாக ஒன்லைன் ஊடாக மாநகர சபையின் அலுவலக கணிணிப் பதிவில் வரவு வைத்துக் கழிக்கப்படும். குறித்த இலத்திரனியல் பற்றுச்சீட்டில் செலுத்திய தொகை மற்றும் நிலுவைத் தொகை உள்ளிட்ட விபரங்கள் அடங்கியிருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.