நாங்கள் நினைத்தால் ஒரே நாளில் ஹீரோவாகலாம் : சமூக பாதுகாப்புக்கான எங்களின் அணுகுமுறை சரியென்பதை காலம் உணர்த்தும் – சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் எம்.பி

எமது நாடு பொருளாதார நெருக்கடியான சூழ்நிலையில் இருந்து கொண்டிருக்கிறது. இந்த பொருளாதார நெருக்கடிக்கான காரண, காரியங்களை செய்ய முடியாத நிலையில் இந்த நாட்டில் வாழும் சிறுபான்மையான தமிழ், முஸ்லிம் சமூகம் இந்த நாட்டின் ஆட்சிமுறையில் பெரியளவிலான வகிபாகத்தை செய்யக்கூடிய ஒரு இடத்தை இந்த நாட்டின் சுதந்திரத்திற்கு பின்னரான கட்டமைப்பு இடம்கொடுக்கவில்லை. இப்போது ஆட்சியில் இருப்பவர்களாக இருந்தாலும் சரி இதற்கு முந்திய நல்லாட்சியாக இருந்தாலும் சரி சுதந்திரத்திற்கு பின்னர் தெற்கிலுள்ள தேசியவாதிகள் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த புத்திஜீவிகள், பொருளாதர வல்லுனர்களின் திறமைகளை பயன்படுத்த தவறிவிட்டார்கள். இது மிகவும் கவலையான விடயமாகும் என முன்னாள் இராஜாங்க அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் சனியன்று அட்டாளைச்சேனையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு பேசும்போது தெரிவித்தார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர், தெற்காசியாவை எடுத்துக்கொண்டால் எம்மை விட கல்வியறிவு குறைந்த நாடான பங்களாதேஸ் மிகவும் கூடிய சனத்தொகையுடன் வறுமையில் இருந்த நாடு. இப்போது 2025 இல் 253 பில்லியன் டொலர்களை சேமிப்பு நிதியாக மாறும் வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் மத, இனரீதியான பிரச்சினைகளை தாண்டி நாட்டை வளப்படுத்தி முன்னேற்ற அவர்கள் எடுத்த விடயங்களே. இதற்கு முன்னர் மலேசியா போன்ற நாடுகளும் பொருளாதரத்தில் முன்னேறிக் கொண்டிருக்கிறது. நாட்டில் அமைதி ஏற்படுத்தப்பட்ட பின்னரும் இன விரிசலை உண்டாக்கும் ஒரே நாடு ஒரே சட்டம் போன்றவை உள்ளது. அரசுடன் உறவை கொண்டுள்ளவர்கள் என்றவகையில் எங்களை நீங்கள் வேறு கண்னோட்டத்தில் பார்க்கலாம். தமிழ் முஸ்லிம் சமூகத்திற்கு இருக்கும் ஆபத்து என்னவென்றால் இந்த அரசில் ஒரு வியாத்கம எனும் நிபுணத்துவ குழு அழுத்தக்குழுவாக இப்பொது மாறியிருக்கிறது. இந்த நாட்டின் அமைச்சரவை, பாராளுமன்றம் தெரிவிப்பதை விட நாட்டின் முக்கிய தீர்மானங்களை எடுப்பதனால் இந்த சூழ்நிலையில் நாங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் பிராந்தியம் மற்றும் சமூகங்களின் உரிமைகளை பறிகொடுத்து விடக்கூடாது என்பதனாலையே நாங்கள் இந்த அணுகுமுறையை கையாளுகின்றோம்.

சாதாரண பொதுமக்களை விட ஆபத்துகளின் தன்மையை 200 சதவீதம் அறிந்தமையால்தான் ஒட்டுமொத்தமாக நடுத்தெருவில் நிற்கக்கூடாது. எமது முன்னோர்கள் பெற்ற உரிமைகள் பறிபோகிவிடக்கூடாது என்பதனால் ஜனரஞ்சக அரசியலை விட்டுவிட்டு எதிர்க்கட்சியில் இருந்து பேசிக்கொண்டு இருந்து விட்டு சபா மண்டபத்தில் செங்கோலை தூக்கியடிக்கும் தைரியமும் எங்களுக்கு இருக்கிறது. அதன்மூலம் ஒரே இரவில் இந்த சமூகத்தை எங்களை ஹீரோக்களாக பார்க்கவைக்க முடியும். அடுத்தநாளே பல இடங்களில் பல்வேறு உரிமைகளை பறிகொடுக்க நேரிடும். சமூகத்தின் தலைவர்கள் ஜனரஞ்சக அரசியலை விட மக்களின் நலனை உணர்வு பூர்வமாக சிந்திக்க வேண்டும். எமது நாட்டில் இந்திய படைகள் வெளியேற வேண்டும் ஒரு கருத்தில் எல்லோரும் இருந்த போது மறைந்த தலைவர் அஸ்ரப் அவர்கள் இந்திய படைகள் வெளியேற கூடாது என்று பேசியபோது சந்திகளிலும், கடற்கரைகளிலும், கடைகளிலும் இருந்துகொண்டு மறைந்த தலைவர் அஸ்ரப் அவர்களுக்கு ஏசிக் கொண்டிருந்தோம். இறுதியில் இந்திய படைகள் வெளியேறிய பின்னர் கிழக்கில் பாதுகாப்பில் என்ன நடந்தது என்பதை நாம் அறிவோம். இதுதான் தலைமைத்துவ ஆளுமையும், தூரநோக்கு சிந்தனையும். எங்களின் அணுகுமுறையும் சரியென்பதை காலம் உணர்த்தும்

மக்கள் சேவையில் நேரடியாக 20 வருடங்களுக்கு மேலாக இருப்பவன் என்ற அடிப்படையில் பொதுச்சேவை செய்பவர்களின் கஷ்டங்கள், வலியை அறிந்தவன் என்ற அடிப்படையில் பொது சேவைகள் செய்பவர்களை பாராட்டி தட்டிக்கொடுக்கவேண்டிய தேவை சமூகத்திற்கு உள்ளது என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.