தலைவர்கள் வானத்திலிருந்து விழுபவர்கள் அல்ல : மக்களினதும், மண்ணினதும் பிரச்சினைகள் அறிந்தவர்களாக இருக்க வேண்டும் – எஸ்.எம். சபீஸ்

தலைவன் ஒருவனுக்கு அடிப்படையிலிருந்தே மண்ணினதும், மக்களினதும் பிரச்சினைகள் தெரிந்திருக்க வேண்டும். அவற்றையெல்லாம் அனுபவித்துக்கொண்டே அவன் வளர்ந்து வந்திருக்க வேண்டும். அப்படி தனது இளமை பருவத்திலையே மெஸ்ரோவை உருவாக்கி அரசியல் அதிகாரம் எதுவுமில்லாது சேவைகள் பல செய்த ஒருவராக தன்னை அடையாளம் காட்டி பின்னாட்களில் அரசியலிலும் சாதித்துக்கொண்டிருக்கும் முன்னாள் இராஜாங்க அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸை தலைவனாக காண்கிறேன். எங்களின் பாசறை வேறாக இருந்தாலும் அவர் சமூகத்திற்கு செய்யும் சேவைகளை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். நல்லாட்சி காலத்தில் தனது அமைச்சை கூட தூக்கி வீசி இறுதிவரை எவ்வித பதவிகளையும் அவர் பொறுப்பேற்கவில்லை. பதவியாசை இல்லாமல் மக்கள் சேவையை இலக்காக கொண்டு சேவைசெய்யும் ஹரீஸை கிழக்கிலிருந்து தலைமை கொடுக்க தகுதியானவராக பார்க்கிறேன்.என அக்கரைப்பற்று மாநகரசபை உறுப்பினரும், அக்கரைப்பற்று அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளன தலைவருமான எஸ்.எம். சபீஸ் தெரிவித்தார்.

அக்கரைப்பற்று ஆர்.கே.எஸ். வலையமைப்பு நடத்திய ஆளுமைக்கான விருதுகள் வழங்கும் நிகழ்வு அட்டாளைச்சேனை லொயிட்ஸ் மண்டபத்தில் சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.ஐ.எம். றியாஸ் தலைமையில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. அங்கு விசேட அதிதியாக கலந்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

எதிர்காலத்தில் அது சாத்தியமாகும் எனும் நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. அவர் திறமையானவர். அயராது சேவை செய்பவர்களை ஊக்கப்படுத்த நாம் கொடுக்கும் உணவு பாராட்டுத்தான். ஒருவருக்கு நாம் வழங்கும் பாராட்டும், கைத்தட்டல்களும் பெறுமதிக்கு எல்லையே இல்லாத ஒன்றாகும். இது தொடர்பில் அண்மையில் இந்திய கிரிக்கட் வீரர் தோனியும் இதை வலியுறுத்தி பேசியிருந்தார். பத்திரிகைக்காரர்கள் சிறந்தவர்கள். நடுநிலையுடன் கட்சி பேதங்களுக்கு அப்பால் மக்களுக்கு உண்மைகளை கொண்டு சேர்ப்பவர்கள். அவர்கள் பாராட்டப்பட வேண்டும்.

இதே போன்று கொரோனாவில் மரணித்த ஜனாஸாக்கள் தீக்கிரையான போது குரல்கொடுத்தது மாத்திரமின்றி ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய அனுமதி வழங்கிய போது ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய முழுமையாக பாடுபட்டவர். மாத்திரமின்றி முஸ்லிம் சமூகத்திற்காக குரல்கொடுக்கும் பெரும் தகையாக முன்னாள் இராஜாங்க அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான பைசால் காசிமை காண்கிறேன். தலைவன் என்பவன் வானத்திலிருந்து விழுந்துவிட முடியாது. தனது செல்வாக்குகளை கொண்டு தலைவராக ஆகிவிடவும் முடியாது. அதற்கு அண்மைய உதாரணமாக தமிழக தேர்தலில் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட உலக நாயகனை பார்க்கலாம். அவர் ஒரு தொகுதியை கூட வெல்ல முடியாமல் போனது.  என்று தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.