ரஹ்மத் பவுண்டேஷன் ஏற்பாட்டில் பெரிய நீலாவணை விநாயகர் ஆலயத்திற்கு நீர் வசதி.

கல்முனை, பெரிய நீலாவணை ஶ்ரீ வேம்படி விநாயகர் ஆலயத்திற்கு மிக நீண்ட காலத் தேவையாக இருந்து வந்த பொதுக்கிணறு ஒன்று கல்முனை ரஹ்மத் பவுண்டேஷன் ஏற்பாட்டில் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆலயத்தில் அன்றாடம் சமய ஆராதனைகளுக்கு வருகின்ற மக்களுக்கு குடிநீர் வசதி இல்லாதிருந்தமை பெரும் குறைபாடாக காணப்பட்ட நிலையில் இப்பிரச்சினையை ஆலய நிர்வாகிகள் கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஆர்.செலஸ்டினா ஊடாக மாநகர பிரதி முதல்வரும் மேற்படி அமைப்பின் தலைவருமான ரஹ்மத் மன்சூரின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தனர்.

இதையடுத்து, ரஹ்மத் மன்சூர் மேற்கொண்ட அவசர நடவடிக்கையின் பயனாக குறித்த ஆலய வளாகத்தில் பொதுக்கிணறு ஒன்று துரிதமாக நிர்மாணிக்கப்பட்டு, நேற்று அவரது பங்கேற்புடன் கையளிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் மாநகர சபை உறுப்பினர்களான ஆர்.செலஸ்டினா, கே.புவனேஸ்வரி மற்றும் ஆலய நிர்வாகிகள் உள்ளிட்ட பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இதன்போது ஆலயத்தின் ஏனைய தேவைகள் குறித்து கேட்டறிந்து கொண்ட பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர், இவ்வாறான பயன்மிக்கதும் நிலைபேறானதுமான நல்லிணக்க செயற்பாட்டை தமது அமைப்பு முன்னெடுப்பதற்கு உதவிய வை.டபிள்யு.எம்.ஏ (YWMA) நிறுவனத்துக்கு தனது இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டார்.


கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.