கல்முனை, பாண்டிருப்பில் ஊருக்குள் புகுந்த கடல்; ஆலயங்கள், வீடுகளுக்கு பாதிப்பு.

கல்முனை மற்றும் பாண்டிருப்பு பிரதேசங்களில் ஏற்பட்ட கடற் கொந்தளிப்பு காரணமாக கடற்கரை வீதியையும் தாண்டி குடியிருப்பு பகுதிக்குள் கடல் நீர் புகுந்து, வெள்ளக்காடாக மாறியதையடுத்து மாநகர சபையின் கனரக இயந்திரங்கள் மூலம் கடல் நீரை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

நேற்று நள்ளிரவு இப்பிரதேசத்தில் திடீரென கடற்கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கல்முனை மாமாங்க விநாயகர் ஆலயம் மற்றும் பாண்டிருப்பு விஷ்ணு ஆலயம் உள்ளிட்ட பகுதிகளும் பல வீடு, வளவுகளும் வெள்ளத்தில் மூழ்கி, பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன.

இதனால் இப்பிரதச மக்கள் அச்சமும் கலவரமும் அடைந்த நிலையில் அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்தனர். இதையடுத்து கல்முனை மாநகர சபை உறுப்பினரான ஹென்றி மகேந்திரன், மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப் மற்றும் ஆணையாளர் எம்.சி.ஆகியோருடன் தொடர்பு கொண்டு நிலைமையை விளக்கியதையடுத்து, மாநகர சபையின் கனரக இயந்திரங்கள் மூலம் அப்பகுதிகளில் தேங்கியுள்ள கடல் நீரை அகற்றும் பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அண்மைக்காலமாக கல்முனை மற்றும் பாண்டிருப்பு பிரதேசங்களில் கடலரிப்பு ஏற்பட்டு வருகின்றது. இதனைக் கட்டுப்படுத்துவதற்கு கரையோரம் பேணல் திணைக்களம், அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் சுற்றாடல் அதிகார சபை உள்ளிட்ட அரச நிறுவனங்கள் அவசர நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டுமெனக் கோரி கல்முனை மாநகர சபையின் கடந்த மாத பொதுச் சபை அமர்வில் பிரேரணையொன்று நிறைவேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.