கடல்சார் அனர்த்த தவிர்ப்பு தொடர்பாக மீனவர்களுடன் கலந்துரையாடிய பல்கலைக்கழகம் : பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆராய்வு.

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக அனர்த்த தவிர்ப்பு தொழிநுட்பவியல் ஆய்வு மையம் மற்றும் அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் கடல்சார் அனர்த்த தவிர்ப்பு தொடர்பாக மீனவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்வு இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக தொழிநுட்ப பீடத்தின் கூட்ட மண்டபத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்றது.
தொழிநுட்ப பீடத்தின் முன்னாள் பீடாதிபதி கலாநிதி எம்.ஜீ. எம். தாரிகின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப்பணிப்பாளர் எம்.ஏ.சி.எம்.றியாஸ் கலந்து கொண்டு மீனவ சங்கங்களின் பிரதிநிதிகளுக்கு கடல்சார் அனர்த்த தவிர்ப்பு தொடர்பிலான விடயங்களை கலந்துரையாடினார்.
கடலில் மீனவர்கள்படும் கஷ்டங்கள், மீனவர்களுக்கு பயிற்சி வழங்குவது, கடலில் மூழ்கி காணாமல் போகும் நிலை, கடல்சார் அனர்த்தங்கள், மீன்பிடி துறைமுக இயங்காமை போன்ற பல விடயங்களை எடுத்துரைத்த மீனவர்கள் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக அனர்த்த தவிர்ப்பு தொழிநுட்பவியல் ஆய்வு மையம் மற்றும் அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் மூலமாக நிரந்தர தீர்வை பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்தனர்.
இந்நிகழ்வில் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள், அம்பாறை கரையோர பிரதேச மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள், அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.