கலவை மாற்றமே காஸ் சிலிண்டர் வெடிப்புக்கு பிரதான காரணம்-ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு தலைவர்

காஸ் சிலிண்டர்கள் தொடர்பான தீப்பற்றல்கள் மற்றும் வெடிப்புச் சம்பவங்களுக்கு பிரதான காரணம் கலவையில் மாற்றம் செய்யப்பட்டமையே என வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பான விசாரணை மற்றும் அவற்றுக்கான தீர்வுகளைக் கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் தலைவரும் மொரட்டுவ பல்கலைக்கழக பேராசிரியர் ஷாந்த வல்பலகே இன்று தெரிவித்தார்.
ஆணைக்குழுவின் அறிக்கை நேற்று ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்ட நிலையில் அது குறி்த்து கொழும்பில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளிக்கும்போதே அவா் இதனைத் தெரிவித்தார்.
காஸ் சிலிண்டர்கள் தொடர்பான தீப்பற்றல்கள் மற்றும் வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பான விசாரணை மற்றும் அவற்றுக்கான தீர்வுகளைக் கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை நேற்று பிற்பகல், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கையளிக்கப்பட்டது.
குழுவின் தலைவர் பேராசிரியர் ஷாந்த வல்பலகே இந்த அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளித்தார்.
நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களில் அண்மைக் காலமாகப் பதிவாகிவரும் காஸ் (LPG) சிலிண்டர் தொடர்பான தீப்பற்றல்கள், வெடிப்புகள் மற்றும் அதற்கான காரணிகளைக் கண்டறிந்து, அவை தொடர்பில் எடுக்கக்கூடிய உடன் நடவடிக்கைகளை முன்வைக்குமாறு, ஜனாதிபதியால் கடந்த நவம்பர் மாதம் 30ஆம் திகதியன்று, இந்தக் குழு நியமிக்கப்பட்டது.
இதன்படி, இரண்டு வாரக் காலப்பகுதிக்குள் லிட்ரோ மற்றும் லாஃப் எனும் இரு பிரதான எரிவாயு நிறுவனங்களுக்குச் சென்று நேரடியாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், பரிசோதனைகள் மற்றும் 11 நிறுவனங்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள், தீப்பற்றல் மற்றும் வெடிப்புச் சம்பவங்கள் பதிவான 17 இடங்கள், மின்னஞ்சல் மூலமாகப் பெற்றுக்கொள்ளப்பட்ட ஆலோசனைகள் போன்றவற்றின் அடிப்படையில், இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஷாந்த வல்பலகே தலைமைத்துவத்தில் அமைந்த இக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாக, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அஜித் டீ அல்விஸ், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டபிள்யூ.டீ.டபிள்யூ. ஜயதிலக்க, பேராசிரியர் பிரதீப் ஜயவீர, இலங்கையின் புதிய கண்டுபிடிப்பாளர்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் பேராசிரியர் நாராயண் சிறிமுத்து, தொழில்நுட்பக் கல்லூரியின் மேலதிகப் பணிப்பாளர் நாயகம் ஜெனரல் கலாநிதி சுதர்ஷன சோமசிறி மற்றும் இலங்கைத் தர நிர்ணய நிறுவனத்தின் சிரேஷ்ட பிரதிப் பணிப்பாளர் சுஜீவ மஹகம ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.
மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சாலிய ஜயசேகரவும், இதற்கான ஒத்துழைப்புகளை வழங்கியிருந்தார்.
காஸ் சிலிண்டர் தொடர்பான தீப்பற்றல்கள் மற்றும் வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும்போது, சம்பவங்களைக் கண்டறிதல் மற்றும் அனர்த்தத்துக்கு ஏதுவான இரு காரணங்கள் அடிப்படையில் இந்த முழுமையான அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதென்று, குழுவின் தலைவர் ஷாந்த வல்பலகே தெரிவித்தார்.
தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினையிலிருந்து மீள்வதற்கு, குறுகியகால மற்றும் நீண்டகால அடிப்படையில் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளும், இந்த அறிக்கை மூலம் முன்வைக்கப்பட்டுள்ளன என்றும், தலைவர் குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.