சாய்ந்தமருதில் “கிராமத்துடன் உரையாடல்” ஆரம்பகட்ட கூட்டம் : எம்.பிக்களான அதாஉல்லாவும், ஹரீஸும் பங்கேற்பு.

வரவுசெலவுத்திட்டம் 2022 இற்கான நிதி ஒதுக்கீட்டின் மூலம் அபிவிருத்தியின் பயன்கள் விரைவாக மக்களுக்கு சென்றடையும் வகையில் கிராம மட்ட பிராந்திய அபிவிருத்திகளுக்கு முன்னுரிமை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில் 2022 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் செயற்படுத்தப்படுகின்ற “கிராமத்துடன் உரையாடல்” கிராமிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் அபிவிருத்தி கருத்திட்ட முன்மொழிவுகளை செயற்படுத்தல் மற்றும் ஒருங்கிணைத்தல் என்பற்றைப் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்களினூடாக முழு வேலைத்திட்டத்தையும் முன்னுரிமை வேலைத்திட்டமாக செயற்படுத்துவதற்கான சாய்ந்தமருது பிரதேச செயலக பிரிவுக்கான ஆரம்பகட்ட கூட்டம் பிரதேச செயலாளர் எம்.எம்.ஆஸீக் தலைமையில் வெள்ளிக்கிழமை பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.

“கிராமத்துடன் உரையாடல்” கிராமிய அபிவிருத்தி வேலைத்திட்ட ஆரம்ப நிகழ்விற்கு பிரதம அதிதியாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான  சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ், தேசிய காங்கிரஸின் தலைவர் ஏ.எல்.எம் அதாவுல்லாஹ்,  ஆகியோர் கலந்து கொண்டதோடு இவ்வேலைத்திட்டம் தொடர்பிலான சிறப்புரையாற்றினார். மேலும் தலைமைப்பீட சமூர்த்தி முகாமையாளர் யூ.எல்.எம் சலீம்  கலந்துகொண்டு இவ்வேலைத்திட்டம் பற்றிய விளக்க உரை நிகழ்த்தினார்.

பிரதேச செயலக மட்டத்தில் கிராமிய அபிவிருத்தி கருத்திட்ட முன்மொழிவுகளை வெற்றிகரமாக செயற்படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் பற்றிய விளக்கம்  உதவி திட்டமிடல் பணிப்பாளர்  கே.எல்.ஏ ஹமீட்டினால் வழங்கப்பட்டது. தற்போதைய கோவிட்-19 தொற்றுநோய் நிலையினால் ஏற்படுத்தப்பட்டுள்ள குறுகிய கால சவால்களுக்கு கவனம் செலுத்துவதன் மூலம் கிராமிய மக்களின் சிதைக்கப்பட்டுள்ள வாழ்வாதாரங்களை புத்துயிர் அளித்து கிராமிய உற்பத்திப் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதனூடாகத் தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதே இவ்வேலைத்திட்டத்தின் முதன்மையான தேவையாகும்.
மேலும் கிராமிய மட்ட உட்கட்டமைப்பு வசதிகள், வீதிகள் என்பவற்றை உடனடியாக சீரமைத்து பிராந்திய ரீதியிலான புத்தெழுச்சியை கட்டியெழுப்புவதும் இதன் முதன்மை நோக்கமாகும். இவ்வேலைத்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தி கருத்திட்டங்கள் வாழ்வாதார அபிவிருத்தி – 40%,பொது உட்கட்டமைப்பு அபிவிருத்தி – 40%, சுற்றாடல் மற்றும் நிலையான அபிவிருத்தி – 10%, சமூக நலன் மற்றும் சமூக அபிவிருத்தி – 10% போன்ற பிரிவுகளின் கீழ் செயற்படுத்தப்படவுள்ளது.

அதன் பிரகாரம் இவ்வேலைத் திட்டங்கள் மற்றும் கிராமிய அபிவிருத்திகளுக்கான நிதி ஒதுக்கீடானது கிராம அபிவிருத்தி கருத்திட்டங்கள் (கிராம அலுவலகர் பிரிவு ஒன்றுக்கு ரூபா 3 மில்லியன்) – ரூபா 42,063 மில்லியன், உள்ளூராட்சி பிரிவுகளின் அபிவிருத்தி (பிரிவுக்கு ரூபா 4 மில்லியன்) – ரூபா 19,668 மில்லியன், கிராமிய வாழ்வாதார அபிவிருத்தி (மேற்குறிப்பிட்டவற்றுக்கு மேலதிகமாக) – ரூபா 19,894 மில்லியன், பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத்திட்டம் (நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு ரூபா 15 மில்லியன்) – ரூபா 3,375 மில்லியன், என்ற நிதி ஒதுக்கீட்டின் அடிப்படையில்  “கிராமத்துடனான உரையாடல்” ஆரம்ப கட்ட கலந்துரையாடல் மூலம் கருத்திட்டங்கள் பெறப்பட்டு 2022 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் கிராமிய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் செயற்படுத்தப்படவுள்ளது.

இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.ஆர்.ஏ அஸீஸ், கணக்காளர் ஏ.ஜே நுஸ்ரத் பானு, சமுர்த்தி தலைமைப் பீட முகாமையாளர்  ஏ.சீ.ஏ.நஜீம், நிருவாக உத்தியோகத்தர் ஏ.சீ.ஏ பளிழ், சிரேஷ்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்  ஏ.பீ.எம் அஸ்ஹர், பாராளுமன்ற உறுப்பினர் ஹரிஸின் பிரத்தியேக செயலாளர் நெளபர் ஏ பாவா, இணைப்பாளர் சப்றாஸ் நிலாம், உட்பட  சிவில் சமூக பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.