கூட்டுறவுச் சங்கங்களை மக்கள் மத்தியில் மிளிரச் செய்யும் திட்டங்களை அரசாங்கம் முன்னெடுக்கின்றது…

சுமன்)

அரசாங்கத்தினால் கொடுக்கும் நிவாரணங்களை வழங்கும் அமைப்பாக மாத்திரம் இருந்த கூட்டுறவுச் சங்கங்களை மாற்றி மக்கள் மத்தியில் மிளிரச் செய்து அபிவிருத்தி அடையக் கூடிய திட்டங்களை இந்த அரசாங்கம் முன்னெடுத்துள்ளது என கிழக்கு மாகாண விவசாய, கூட்டுறவு அபிவிருத்தி, வாழ்வாதாரம், மீன்பிடி அமைச்சின் செயலாளர் திருமதி கலாமதி பத்மராஜா தெரிவித்தார்.

ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு வேலைத்திட்டத்தின் கீழ் சௌபாக்கிய கூட்டுறவு வேலைத்திட்டத்தின் பொதுமக்கள் குறைந்த விலையில் பொருட்களை கொள்வனவு செய்யும் வகையில் மட்டக்களப்பு பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு நகரில் திருமலை வீதியில் மட்டக்களப்பு இந்துக்கல்லூரி விளையாட்டு மைதானத்திற்கு முன்பாக கோப் பிறஸ் கூட்டுறவு விற்பனை நிலையம் திறந்துவைக்கும் நிகழ்வு நேற்றைய தினம் இடம்பெற்றது.

மட்டக்களப்பு பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் எம்.உதயராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய, கூட்டுறவு அபிவிருத்தி, வாழ்வாதார மீன்பிடி அமைச்சின் செயலாளர் திருமதி கலாமதி பத்மராஜா, கிழக்கு மாகாண கூட்டுறவு திணைக்கள ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி, கிழக்கு மாகாண கூட்டுறவு திணைக்கள பிரதி ஆணையாளர் எஸ்.பிரதீபன், கூட்டுறவு அபிவிருத்தி திணைக்கள மட்டக்களப்பு மாவட்ட உதவி ஆணையாளர் வி.தங்கவேல் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அரசாங்கத்தின் சௌபாக்கியா திட்டத்தின் கீழ் கூட்டுறவு பகுதியை அபிவிருத்தி செய்வதற்காக இலங்கை பூராகவும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கின்றது. கிழக்கு மாகாணத்திலும் சுமார் 14 கோப் பிறஸ் நிலையங்கள் திறப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் இச் செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

கூட்டுறவு என்பது அனைவரும் இணைந்து செயற்படுத்தும் ஒரு விடயம். இந்த கூட்டுறவின் மூலம் நிலையான அபிவிருத்தியைக் கொண்ட சங்கங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

கடந்த காலங்களில் இந்த கூட்டுறவுச் சங்கங்கள் அரசாங்கத்தினால் கொடுக்கும் நிவாரணங்களை வழங்கும் அமைப்பாகவே காணப்பட்டது. ஆனால் இந்த அரசாங்கம் அதனை மாற்றி மக்கள் மத்தியில் கூட்டுறவுச் சங்கங்களை மிளிரச் செய்து அபிவிருத்தி அடையக் கூடிய திட்டங்களை முன்னெடுத்துள்ளது.

கூட்டுறவுச் சங்கங்களின் கோப் பிறஸ் நிலையத்திற்குச் சென்றால் பொருட்கள் கொள்வனவைச் செய்யலாம் என்ற சிந்தனையை மக்கள் மத்தியில் கொண்டுவர வேண்டும். அதற்கான செயற்திட்டங்களை கூட்டுறவுச் சங்கங்களின் இயக்குனர் சபை உறுப்பினர்களே மேற்கொள்ள வேண்டும் என்று தொவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.