அதிபர், ஆசிரியர் சம்பள முரண்பாடு; பாதிக்கப்பட்டோருக்கு நீதி கோரி உயர் நீதிமன்றில் வழக்கு

(அஸ்லம் எஸ்.மௌலானா)

1997 ஆம் ஆண்டு முதல் 2021 வரை ஓய்வுபெற்ற அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டிற்கு தீர்வு கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக இலங்கை கல்வி நிருவாக அதிகாரிகளின் கிழக்கு மாகாண சங்கச் செயலாளரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான ஏ.எல்.முகம்மட் முக்தார் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்;

1997 ஆம் ஆண்டு வெளியான பி.சி.பெரேரா சம்பள அறிக்கையின் மூலம் இழைக்கப்பட்ட சம்பள உயர்வு அநீதிக்கு நிவாரணமாக ஆசிரியர்களால் மேற்கொள்ளப்பட்ட தொடர் வேலை நிறுத்தங்கள் காரணமாக 2022 ஜனவரி முதல் சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

இச்சம்பள உயர்வு வழங்குவது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டபோது 1997 ஆம் ஆண்டு தொடக்கம் 2021 வரையான காலத்தில் கடமையாற்றிய அதிபர், ஆசிரியர்கள் கவனத்தில் கொள்ளப்படவில்லை. இது அவர்களுக்கு இழைக்கப்பட்டிருக்கும் பாரிய அநீதியாகும். ஏனெனில் 1997 ஆம் ஆண்டுக்குப் பின்னர் கடமையில் இருந்த அனைத்து அதிபர், ஆசிரியர்களும் இச்சம்பள முரண்பாட்டால் பாதிக்கப்பட்டனர். ஆகையினால் அவர்களுக்கும் இச்சமபள உயர்வு உரிமையானதாகும்.

அதிபர், ஆசிரியர்களுக்கு 2022 ஜனவரி முதல் அமுலாகியுள்ள சம்பள மாற்றமானது உண்மையில் சமபல உயர்வல்ல. மாறாக 1997 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட சம்பள முரண்பாட்டினால் உருவான வாதிப்புக்கான தீர்வாகும்.

ஆனால் 31.12.2021 வரை கடமையில் இருந்த ஆசிரியருக்கு இவ்வதிகரிப்பு மறுக்கப்பட்டு, மறுநாள் 01.01.2022 அன்று கடமையில் இருப்போருக்கு அதிகரிக்கப்பட்ட சம்பள அதிகரிப்பும் ஓய்வூதியமும் வழங்கப்பட்டு வருகிறது. இதனை அரசாங்கம் எவ்வாறு நியாயப்படுத்தும்?

ஆகையினால் இத்தீர்வில் உள்ளடக்கப்படாத அதிபர், ஆசிரியர்களுக்கு நீதி கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் வழக்கிற்கு தமது சங்கம் பூரண ஆதரவை வழங்குவதாகவும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.