கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 25வது பொதுப்பட்டமளிப்பு விழா!!

(ஜீ.மயூரன்)
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 25வது பொதுப்பட்டமளிப்பு விழா
எதிர்வரும் மார்ச் மாதம் 12ஆம், 13ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளதாக கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வந்தாறுமூலை வளாகத்தில் இன்று (09) திகதி இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது கிழக்குப்பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம்  தெரிவித்துள்ளார்.
அவர் இதன்போது மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
கிழக்குப்பல்கலைக்கழகத்தின்  வேந்தர் வைத்திய கலாநிதி வேல்முருகு விவேகானந்தராஜா அவர்களது தலைமையில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நல்லையா கேட்போர் மண்டபத்தில் இடம்பெறவுள்ள பொதுப்பட்டமளிப்புவிழாவின்போது இம்முறை 1958 உள்வாரி மற்றும் வெளிவாரி பட்டதாரி மாணவர்களுக்கும், பட்டப்பின்
தகைமை பெறுபவர்களுக்கும், கௌரவப் பட்டம் பெறுபவர்களும் தமக்கான பட்டத்தினை பெறவுள்ளனர்.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கல்வியமைச்சின் செயலாளர் சிரேஷ்ட பேராசிரியர் கே.கபில பெரேரா அவர்களும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தவிசாளர் சிரேஷ்ட பேராசிரியர் சந்தன பீ.உடவத்த அவர்களும் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளார்கள்.
இம்முறை கிழக்குப்பல்கலைக்கழகத்தால் இப்பல்கலைக்கழகக்தின்
காலஞ்சென்ற முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சிவசுப்ரமணியம் ரவீந்திரநாத் அவர்களின் சேவையினை நினைவு கூர்ந்து கௌரவ விஞ்ஞான கலாநிதிப்பட்டமும் மட்டக்களப்பின் மூத்த எழுத்தாளரும் சமூகவியலாளருமான
வெல்லவூர்க்கோபால் என்றழைக்கப்படும் சீனித்தம்பி கோபாலசிங்கம் அவர்களின் சேவையினைப் பாராட்டி கௌரவ முது இலக்கியமாணிப் பட்டமும்
வழங்கப்படவிருப்பது மிகவும் முக்கியமான விடயமாக கருதப்படுகின்றது.
கிழக்குப்பல்கலைக்கழக வரலாற்றில் முதல்முறையாக 1958 மாணவர்களுக்கான
பொதுப்பட்டமளிப்பு நிகழ்வு நடாத்தப்படுவது இதுவே முதல் தடவையாகும்.
இந்நிகழ்வில் வணிக நிர்வாகத்தில் முதுமாணி (MBA), முதுகலைமாணி (MA), முதுகல்விமாணி(MEd), அபிவிருத்திப் பொருளியலில் முதுமாணி (MDE) ஆகிய
133 பட்டப்பின் தகமைகளுக்கான பட்டங்களும், 2 கௌரவப் பட்டங்களும் முதலாம் நாள் முதலாவது அமர்வில் வழங்கப்படவுள்ளன.
ஏனைய இளமாணிப்
பட்டங்களுக்காக 2வது அமர்வில் 408 பட்டதாரி மாணவர்களும், 3வது அமர்வில் 340 பட்டதாரி மாணவர்களும், இரண்டாம் நாள் நிகழ்வில் முதலாவது அமர்வில்
330 பட்டதாரி மாணவர்களும், 2வது அமர்வில் 360 பட்டதாரி மாணவர்களும், 3வது
அமர்வில் 385 பட்டதாரி மாணவர்களும் பட்டமளித்து கௌரவிக்கப்படவுள்ளனர் என அவர் இதன்போது தெரிவித்திருந்தார்.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 25வது பொதுப்பட்டமளிப்பு விழா தொடர்பான குறித்த ஊடக சந்திப்பின்போது பட்டமளிப்பு விழா குழு தலைவர் பேராசிரியம் எம்.சிதம்பரேசன், கிழக்குப் பல்கலைக்கழகத்தின்  பதிவாளர் ஏ.பகீரதன், சிரேஸ்ட உதவிப் பதிவாளர் (கல்விப் பிரிவு) திருமதி.நிசாந்தினி நிருமிதன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.